மதுரை ஜூன் 2: மதுரை, எஸ்.எஸ்.காலனி போலீஸ் எஸ்.ஐ திலீபனுக்கு கிடைத்த தகவலின் பேரில் மதுரை மாடக்குளம் கண்மாய் கரை பகுதியில் போலீசாருடன் ரகசிய கண்காணிப்பில் ஈடுபட்டார். அப்போது அங்கு கஞ்சா விற்பனை செய்த 7 பேரை போலீசார் சுற்றி வளைத்தனர். அவர்களில் இருவர் அங்கிருந்து தப்பினர். இதையடுத்து சுற்றி வளைக்கப்பட்ட 5 பேரிடம் நடத்திய சோதனையில், 7.700 கிலோ கஞ்சா இருப்பது தெரியவந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
விசாரணையில், அவர்கள் மதுரை, புதுஜெயில் ரோட்டை சேர்ந்த அந்தோணி மகன்கள் ஜாக்கி என்ற பிரசாத்(22), அவரது அண்ணன் பாண்டியராஜன்(23) மற்றும் திருப்பாலை அன்புநகரை சேர்ந்த முத்துகிருஷ்ணன்(24), வில்லாபுரம் ஈஸ்வரன்(35), ஜெய்ஹிந்த்புரம் வீரகாளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பாலசுப்பிரமணியன்(24) என தெரியவந்தது. இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார் அவர்கள் 5 பேரையும் கைது செய்தனர். தப்பிச்சென்ற கல்மேடு பகுதியைச் சேர்ந்த ராகுல் என்ற விக்கி மற்றும் விஜய் ஆகியோரை போலீசார் தேடி வருகின்றனர்.