மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே வரதராஜ பெருமாள் கோயிலில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியை கலெக்டர் ராகுல்நாத் தொடங்கி வைத்தார். மதுராந்தகம் ஒன்றியம் அரசர் கோயில் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அங்குள்ள வரதராஜ பெருமாள் கோயிலுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் பரப்பளவில் கலைஞர் தல மரக்கன்றுகள் நடும் திட்டத்தின் கீழ், 250 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு கலெக்டர் ராகுல்நாத் தலைமை தாங்கினார். ஊராட்சி மன்ற தலைவர் சந்திரபாபு முன்னிலை வகித்தார். செயல் அலுவலர் மேகவண்ணன் அனைவரையும் வரவேற்றார். இதில், கலெக்டர் ராகுல்நாத் கலந்து கொண்டு மரக்கன்றுகள் நட்டு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து, அப்பகுதி கிராமமக்கள் 200க்கும் மேற்பட்டோர் ஒரு ஏக்கர் பரப்பளவு நிலத்தில் குழி தோண்டி மா, பலா, கொய்யா, அத்தி, தேக்கு, வேங்கை உள்ளிட்ட 250 மரக்கன்றுகள் நட்டனர்.
நடப்பட்ட மரக்கன்றுகளை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் மூலம் பராமரிக்கும் பணியில் அப்பகுதி மக்கள் தினமும் ஈடுபட உள்ளனர். இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மண்டல இணை ஆணையர் வான்மதி, உதவி ஆணையர் லட்சுமி காந்த பாரதி, துணை தலைவர் சத்யா, பூதூர் ஊராட்சி மன்ற தலைவர் சுரேஷ், வருவாய் துறையினர், ஊரக வளர்ச்சி துறையினர் உள்ளிட்ட கிராமமக்கள் கலந்து கொண்டனர்.