மண்டபம்,பிப்,20: மண்டபம் முகாம் ரயில் நிலையத்தில் தாழ்வாக இருந்த நடைமேடையை உயர்த்தி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. மண்டபம் அருகே மண்டபம் முகாம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இந்த ரயில் நிலைய பகுதியை சுற்றி மரைக்காயர்பட்டிணம், வேதாளை, முனைக்காடு, தமிழர்கள் மறுவாழ்வு முகாம் மற்றும் மண்டபம் கேம்பு வடக்கு பகுதியில் வரை ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகளில் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
இந்த ரயில் நிலையத்தில் ராமேஸ்வரத்தில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பாசஞ்சர் ரயிலான மதுரை, திருச்சி ஆகிய ரயில்கள் நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்லும். இந்த நிலையில் மண்டபம் ரயில் நிலையத்தில் நடைமேடை மிகவும் தாழ்வாக இருந்தது. இதனால் நடைமேடையில் இருந்து ரயிலில் பயணிகள் ஏறுவதற்கு மிகவும் சிரமமான சூழ்நிலை இருந்தது. நீண்டநாள் பயணிகளின் கோரிக்கையை ஏற்று ரயில்வே நிர்வாகம் நடைமேடையை உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுத்து வந்தது.
அதன்பேரில் மண்டபம் கேம்ப் ரயில் நிலையத்தில் நடைமேடை உயர்த்தி அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நடைமேடை சுவர்கள் உயர்த்தப்பட்டு அதில் மணல்கள் நிரப்பி மேலே சிமெண்ட் பிளாட்பாரம் போடுவதற்கான பணிகள் நேற்று நடைபெற்றது. நடைமேடை அமைக்கும் பணிகள் முழுவதும் முடிவடையும் பட்சத்தில் பிளாட்பாரத்தில் இருந்து ரயிலில் ஏறுவதற்கு பயணிகளுக்கு வசதியாக இருக்கும்.