சென்னை: பாஜ மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். மணிப்பூர் மாநில ஆளுநராக இருந்த நஜ்மா ஹெப்துல்லாவின் பதவிக்காலம், கடந்த 10ம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத் தொடர்ந்து சிக்கிம் ஆளுநராக உள்ள கங்கா பிரசாத், மணிப்பூர் மாநில ஆளுநராக கூடுதல் பொறுப்பு வகித்து வந்தார். இதனால், மணிப்பூருக்கு புதிய ஆளுநரை நியமிக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் தமிழக பாஜ மூத்த தலைவர் இல.கணேசன் மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று பிறப்பித்தார்.ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசன்(வயது 76) தஞ்சாவூரைச் சேர்ந்தவர். இவர் 31 ஆண்டுகளாக பாஜவின் செயற்குழு உறுப்பினராக இருந்து வருகிறார்.மேலும், பாஜ தேசிய செயலாளர், தேசிய துணை தலைவர், தமிழக பாஜ தலைவர் உள்ளிட்ட பல்வேறு பதவிகளை வகித்துள்ளார். 2009, 2014ம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் தென் சென்னை தொகுதியில் பாஜ வேட்பாளராகப் போட்டியிட்டு தோல்வியடைந்தார். தொடர்ந்து அவர் 2016ம் ஆண்டு மத்தியப் பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். 2018 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். தொடர்ந்து இரண்டாவது முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்த பாஜ அரசு மூத்த தலைவர்களை கவுரவிக்கும் வகையில் அவர்களுக்கு மாநில ஆளுநர்கள், தேசிய, மாநில அளவில் உயர் பதவிகளை வழங்கியது. இதில் இல.கணேசன் பெயரும் அடிப்பட்டது. அவரும் மாநில ஆளுநராக நியமிக்கப்பட உள்ளார் என்ற தகவல் வெளியானது. இந்த நிலையில் தற்போது அவருக்கு மணிப்பூர் மாநில ஆளுநர் பதவி வழங்கப்பட்டுள்ளது. ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசன் அளித்த பேட்டியில், ‘பொதுவாழ்க்கையில் ஒரு குறிப்பிட்ட லட்சியத்தோடு, தேசிய சிந்தனையோடு ஏறத்தாழ 50 ஆண்டுகள் மேலாக பணியாற்றி வருகிறேன். எனக்கு இந்த புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதில், எனக்கு தர்ம சங்கடமும் இல்லை. ஆனால் இந்த பொறுப்பு, இதன் தன்மை என்ன என்பது போகப்போக தெரிந்து கொள்வேன். அந்த அனுபவ ரீதியான வாய்ப்பு எனக்கு இப்போது கிடைத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. ஏற்கனவே பாஜகவில் இருக்கும் போது, பல்வேறு மாநிலங்களில் பாஜகவின் கூட்டங்கள் நடைபெறும். அப்போது அந்த மாநிலங்களில் தங்குவதற்கான வாய்ப்பு எனக்கு ஏற்பட்டது. அப்போது தமிழ்நாட்டில் பார்க்கும் அதே உணர்வு தான், மற்ற மாநிலங்களிலும் எனக்கு இருந்தது. அந்த வகையில் பாரத தேசத்தின் எந்த பகுதியாக இருந்தாலும் கூட, அங்கே இருப்பவர்கள் நம்மவர்கள் என்ற உணர்வு எனக்கு இருக்கின்றது. சீதோஷண நிலை மாறும். அதை நான் பெரிய விஷயமாக நினைக்கவில்லை. அரசியல் பணியில் இருந்து விடுபட்டு, வேறு ஒரு பணிக்காக செல்ல வேண்டும் என்று நான் சார்ந்திருக்கின்ற கட்சி தலைவர்களே எனக்கு ஆணையிட்டுள்ளார்கள். அவர்கள் ஆணைக்கு நான் கட்டுப்பட்டு நடப்பேன். இதில் எனக்கு எந்தவித வருத்தமும் இல்லை. எனக்கு ஆளுநராக பணியாற்ற வாய்ப்பு தந்த குடியரசுத் தலைவர், பிரதமருக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன்” என்றார்.மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்த 7 ஆண்டுகளில் தமிழகத்தை சேர்ந்த 4 பேர் ஆளுநர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர் அதாவது, தமிழகத்தை சேர்ந்த சண்முகநாதன் மேகாலயா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டிருந்தார். தொடர்ந்து உச்ச நீதிமன்றம் தலைமை நீதிபதியாக இருந்த சதாசிவம் கேரள மாநில மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். அதன் பிறகு பாஜக தலைவராக இருந்த தமிழிசை சவுந்தரராஜன் தெலங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டார். தற்ேபாது அவர் புதுச்சேரி மாநில ஆளுநர் பொறுப்பையும் கூடுதலாக கவனித்து வருகிறார். அந்த வரிசையில் இல.கணேசனும் ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவர்கள் வாழ்த்து: தெலுங்கானா ஆளுநர் மற்றும் புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், மணிப்பூர் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள இல.கணேசனை தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்து தெரிவித்தார். இதே போல, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிச்சாமி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உள்ளிட்ட தலைவர்களும் இல.கணேசனுக்கு வாழ் த்து தெரிவித்துள்ளனர்.மு.க.ஸ்டாலின் வாழ்த்துமுதல்வர் மு.க.ஸ்டாலின் தனது டிவிட்டர் பதிவில்,‘‘மணிப்பூர் மாநில ஆளுநராகப் பொறுப்பேற்கவுள்ள தலைவர் கலைஞரின் அன்பைப் பெற்ற பண்பாளரும்; நீண்ட அரசியல் அனுபவத்துக்குச் சொந்தக்காரருமான அண்ணன் இல.கணேசனுக்கு வாழ்த்துகள் என கூறியுள்ளார்….