கரூர், ஆக.31: கரூர் அருகே மணவாடி ஊராட்சியில் ரூ.9 லட்சம் மதிப்பில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் கட்டப்பட்ட புதிய பள்ளி கட்டிடத்தை ஊராட்சி மன்ற தலைவர் திறந்து வைத்தார். கரூர் மாவட்டம் தாந்தோணி ஊராட்சி ஒன்றிய மணவாடி ஊராட்சி அய்யம்பாளையத்தில் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் புதிய பள்ளி கட்டிடம் கேட்டு பொதுமக்கள் ஊராட்சி மன்ற தலைவருக்கு கோரிக்கை விடுத்தனர். இதன் அடிப்படையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் ஊராட்சி பொதுநிதியில் இருந்து ரூபாய் 9 லட்சம் மதிப்பில் புதிய பள்ளி கட்டப்பட்டு திறப்பு விழா நடைபெற்றது.
விழாவில், ஊராட்சி மன்ற தலைவர் ஏ.பி.கந்தசாமி கலந்து கொண்டு பள்ளி கட்டிடத்தை திறந்து வைத்தார். தலைமை ஆசிரியர் மனோகர், உதவி தலைமை ஆசிரியை ரேவதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், பொதுமக்கள், மாணவ, மாணவியரின் பெற்றோர், ஆசிரியர் சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.