மணப்பாறை: மணப்பாறை மற்றும் சுற்றுவட்டாரத்தில் உள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட 1200 ஏக்கர் சம்பா பயிர் நிவாரணம் வழங்க கோரி கஞ்சநாயக்கன்பட்டியில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது வேளாண் அலுவலர் விவசாயிகள் முன் மண்டியிட்டு உறுதி அளித்தால் அவர்கள் கலைந்து சென்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை, மருங்காபுரி, வையம்பட்டி ஒன்றியங்களில் நெற்பயிர் அதிகமாக பயிர் செய்துள்ளனர். கடந்த சில நாட்களாக பெய்த தொடர் மழையால் கஞ்சநாயக்ககன்பட்டி, எண்டபுளி, அம்மாபட்டி, சிங்கிலிபட்டி 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் வயல்களில் நெற்பயிர்கள் சாய்ந்தது. சுமார் 1200 ஏக்கர் நெற்பயிர் சாய்ந்ததால் விவசாயிகளுக்கு பெரு நஷ்டம் ஏற்பட்டுள்ளது.டெல்டா மாவட்டங்களில் மழையில் சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ₹20 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என முதல்வர் அறிவித்தள்ளார். ஆனால் இதுவரை மணப்பாறை பகுதிகளில் அதிகாரிகள் கணக்கு எடுக்க வில்லை. எனவே, உடனடியாக கணக்கெடுப்பு நடத்தி, ஏக்கருக்கு ₹25ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி நேற்று காலை துவரங்குறிச்சி அருகே கஞ்சநாயக்கன்பட்டியில் 10 கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் திரண்டு திமுக விவசாயி அணி மாவட்ட அமைப்பாளர் கே.சி.பழனிசாமி தலைமையில் அழுகிய நெற்கதிரை சாலையில் போட்டு மறியலில் ஈடுபட்டனர். அப்போது உடனே நிவாரணம் வழங்க கோரி கண்டன கோஷமிட்டனர். விவசாயிகள் போராட்டத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்த மருங்காபுரி வேளாண்துறை அலுவலர் நிரஞ்சன் வந்து பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, வேளாண் துறை அதிகாரிகள் வந்து, கணக்கெடுப்பு நடத்தி நிவாரணம் வழங்கப்படும் என உறுதி அளித்தால் தான் நாங்கள் கலைந்து செல்வோம் என்றனர். உடனே நிரஞ்சன் விவசாயிகள் முன் திடீரென மண்டியிட்டு நானும் விவசாயி தான். உங்கள் கோரிக்கை பற்றி அரசு மற்றும் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளோம். வரும் திங்கள்கிழமை கணக்கெடுப்பு துவங்கும். உரிய நிவாரணம் வழங்கப்படும் என கையெடுத்து கும்பிட்டார். வேளாண் அலுவலரின் உருக்கமான பேச்சாலும், அவரது செயலாலும் மனம் உருகிய கிராம மக்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து விவசாயிகளுடன் சென்று அழுகிய பயிர்களை வேளாண் அலுவலர் நிரஞ்சன் பார்வையிட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.ஒரத்தநாட்டில் 55 ஆயிரம் ஏக்கர்ஒரத்தநாட்டு தாலுகாவில் சுமார் 55 ஆயிரம் ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர் சாகுபடி நடைபெற்றுள்ளது. கடந்த நவம்பர் மாதம் இறுதியில் நடவு செய்யப்பட்டு, பெரும்பாலான பயிர்கள் தற்போது அறுவடைக்காக தயாராக உள்ளன. இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த பலத்த மழையினால், திருவோணம், சென்னியவிடுதி உள்ளிட்ட சுமார் 10க்கும் மேற்பட்ட கிராமங்களில் சாகுபடி செய்த நெற்பயிர் வயல்களில் மழை நீர் சூழ்ந்தது. இதனால் அனைத்து நெற்பயிரும் வயலில் சாய்ந்தது. அதன் பின் மழை நீர் வடிவதற்குள், தற்போது மழை பெய்து வருவதால், அனைத்து, பயிர்களிலும் நாற்றுக்கள் முளைத்து விட்டன. இதனால் அறுவடைக்கு தயாரான சுமார் 5 ஆயிரம் ஏக்கருக்கு மேல் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டு, சேதமாகி உள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம், ஒரத்தநாடு தாலுகாவில் பாதிக்கப்பட்ட நெற்பயிர் ஏக்கர் ஒன்றிற்கு ரூ. 30 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும், தவறும் பட்சத்தில் விவசாயிகளை திரட்டி போராட்டம் நடத்தப்படும் என்று விவசாயிகள் தெரிவித்துள்ளனர்….