துவரங்குறிச்சி, செப்.1: மணப்பாறை, துவரங்குறிச்சி, புத்தாநத்தம், வளநாடு ஆகிய பகுதிகளில் நேற்று இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.திருச்சி புறநகர் மாவட்ட பகுதிகளான மணப்பாறை, துவரங்குறிச்சி, புத்தாநத்தம், வளநாடு, கோவில்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. மேலும் பலத்த காற்று வீசியதால் இருசக்கர வாகன ஓட்டிகள் வாகனத்தை இயக்க முடியாமல் சாலையின் ஓரத்திலே நிறுத்தினர்.
நேற்று பகலில் இப்பகுதிகளில் வெயிலின் தாக்கம் அதிக அளவில் இருந்ததால் பொதுமக்கள் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டது. இந்நிலையில் மாலையில் குளிர்ந்த காற்றுடன் மழை பெய்ததால் சற்று வெப்பம் தணிந்து குளிர்ந்த சூழ்நிலை உருவாகியது. தொடர்ந்து பலத்த மழை பெய்ததால் சாலையில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சீக்கிரமாக வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று சிலர் வாகனங்களை விரைவாக ஓட்டிச் சென்றனர்.
ஆனால் காற்றுடன் மழையும் இடைவிடாது பெய்ததால் வாகன ஓட்டிகள் மெதுவாகவே செல்ல வேண்டிய நிலைக்கு ஆளானார்கள். மேலும் இந்த மழையினால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.