மணப்பாறை, மார்ச் 28: மணப்பாறை அருகே வீட்டின் பூட்டை உடைத்து 2 பவுன் (15 1/2 கிராம்) நகை மற்றும் ரூ.15,000 பணத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த கன்னிவடுகப்பட்டி வீராகோவில்பட்டியைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மனைவி மகேஷ் (32). இவர் கூலி வேலை செய்து வருகிறார். இந்த நிலையில் நேற்றுமுன்தினம் வேலைக்கு செல்வதற்காக வீட்டை பூட்டிவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் அக்கம் பக்கத்தினர் பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது கண்டு உடனடியாக வீட்டின் உரிமையாளரான மகேஷிற்கு தகவல் அளித்தனர். தகவலின்பேரில் மகேஷ் வீட்டிற்கு சென்று பார்த்தார். அங்கு பீரோவில் இருந்த 2 பவுன் (15 1/2 கிராம்) தங்கநகை மற்றும் ரூ.15,000 ஆகியவற்றை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றது தெரிய வந்தது. இதனை அடுத்து நேற்று வையம்பட்டி காவல்நிலையத்தில் மகேஷ் அளித்த புகாரின்பேரில் வையம்பட்டி காவல் ஆய்வாளர் முத்துசாமி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டு வருகிறார் .