மஞ்சூர்,செப்.23: மஞ்சூர் கிண்ணக்கொரை சாலையில் உள்ள அபாயகர மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். நீலகிரி மாவட்டம் மஞ்சூர் அருகே தமிழக கேரளா எல்லையில் அமைந்துள்ளது கிண்ணக்கொரை. மஞ்சூரில் இருந்து சுமார் 30கி.மீ தொலைவில் உள்ளது. இதை சுற்றிலும் 10கும் மேற்பட்ட கிராமங்களில் 2ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில் தாய்சோலா பகுதியில் இருந்து கிண்ணக்கொரை வரை சுமார் 20கி.மீ தூரம் சாலை அடர்ந்த காட்டின் நடுவே அமைந்துள்ளது. இதனால் சாலையின் இரு புறங்களிலும் ஏராளமான மரங்கள் வளர்ந்துள்ளது. இதில் பெரும்பாலான மரங்களும் வயதாகியும், பட்டுபோயும் காணப்படுகிறது.
காற்று, மழை காலங்களில் இந்த மரங்கள் வேறோடு சாலையில் விழுவதால் மஞ்சூர் கிண்ணக்கொரை இடையே வாகனப்போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. மாற்றுப்பாதையும் இல்லாததால் சாலையில் விழும் மரங்களை அகற்றி சீரமைக்கும் வரை பொதுமக்கள், பயணிகள் திண்டாட வேண்டியுள்ளது. இந்நிலையில் கடந்த சில தினங்களாக அவ்வப்போது மழை பெய்து வருகிறது. மழையால் மரங்கள் விழும் அபாயம் உள்ளதால் தாய்சோலா முதல் கிண்ணக்கொரை வரை சாலையின் இருபுறங்களிலும் அபாயகர நிலையில் உள்ள மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் மஞ்சூர் ஊட்டி சாலையிலும் அபாயகரமான நிலையில் காணப்படும் மரங்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள், வாகன ஓட்டுனர்கள் வலியுறுத்தியுள்ளனர்.