திருச்சி, பிப்.27: திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற மக்கள் குறைதீர்நாள் கூட்டத்தில் 727 மனுக்கள் பெறப்பட்டது. வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின்கீழ் ரூ.9.95 லட்சம் மதி்ப்பீட்டில் 21 பயனாளிகளுக்கு நுண்நிதி கடனுதவி ஆணைகளை கலெக்டர் பிரதீப்குமார் வழங்கினார்.
திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று (திங்கள்) கலெக்டர் பிரதீப்குமார் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல், சாதிச்சான்றுகள், இதரச்சான்றுகள், குடும்ப அட்டை, முதியோர் உதவித்தொகை, அரசின் நலத்திட்ட உதவிகள், அடிப்படை வசதிகள், பெண் குழந்தைகள் பாதுகாப்பு திட்ட உதவிகள் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 727 மனுக்கள் பெறப்பட்டது. இம்மனுக்கள் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு கலெக்டர் அறிவுறுத்தினார்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் 21 பயனாளிகளுக்கு ₹9.95 லட்சம் மதிப்பீட்டில் நுண்நிதி கடனுதவிக்கான ஆணையை கலெக்டர் வழங்கினார். அதேபோன்று பெண் குழந்தைகள் காப்போம், பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்னும் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டப்பணிகள் சார்பாக 20 பெண் குழந்தைகளுக்கு சிறு தானிய சிற்றுண்டி பெட்டகத்தை கலெக்டர் வழங்கினார்.
இதைத்தொடா்ந்து, மக்களுடன் முதல்வா் முகாமில் பெறப்பட்ட மனுக்களின் அடிப்படையில் உடனடி தீர்வாக ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறையின் சார்பில் 8 பயனாளிகளுக்கு இலவச தையல் இயந்திரங்களையும், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறையின் சார்பில் ஒரு பயனாளிக்கு இலவச தையல் இயந்திரத்தையும் கலெக்டர் வழங்கினார்.
மகாராஷ்டிராவில் நடைபெற்ற 44வது தடகள விளையாட்டுப்போட்டிகளில் வெற்றி பெற்ற 9 வீரா்களுக்கு பதக்கம் மற்றும் பாராட்டு சான்றிதழ்கள், போட்டிகளில் கலந்து கொண்ட மற்ற 39 வீரா்களுக்கு தங்கம், வௌ்ளி, வெண்கலம் என மொத்தம் 65 பதக்கங்களும், பாராட்டு சான்றிதழ்களையும் கலெக்டர் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் ராஜலட்சுமி, சமூக பாதுகாப்புத்திட்ட தனித்துணை கலெக்டர் செல்வம், உதவி ஆணையா் கலால் உதயக்குமார், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலா் தவச்செல்வம், மாவட்ட ஆதிதிராவிடா் நலத்துறை அலுவலா் மிருணாளினி, அரசுத்துறை அலுவலா்கள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.