டெல்லி: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையில் சிவசேனா-காங்கிரஸ்- தேசிய வாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. சில நாட்களுக்கு முன், மும்பையில் தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டின் அருகில் வெடி பொருளுடன் கார் நிறுத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக வழக்கை மும்பை போலீஸ் கமிஷனராக இருந்த பரம்பீர் சிங் சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்ததை தொடர்ந்து அவர் இடமாற்றம் செய்யப்பட்டார்.அதைத் தொடர்ந்து, பரம் பீர் சிங் முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு 8 பக்க கடிதம் ஒன்றை அனுப்பினார். அதில், தேசியவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவரான மாநில உள்துறை அமைச்சர் அனில் தேஷ்முக் ஒவ்வொரு மாதமும் பார்கள் மற்றும் ரெஸ்ட்டாரண்டுகளில் வசூல் செய்து ரூ.100 கோடி தனக்கு தர வேண்டும் என வற்புறுத்தியதாக குற்றம் சாட்டியிருந்தார். இந்த விவகாரம் மகாராஷ்டிரா அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அமைச்சர் அனில் தேஷ்முக் உடனடியாக பதவி விலக வேண்டுமென பாஜ போர்க்கொடி தூக்கியது.இந்நிலையில், இடம் மாற்றம் செய்யப்பட்டதற்கு எதிராக மும்பை முன்னாள் போலீஸ் கமிஷனர் பரம் பிர் சிங் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. …