சென்னை: திருவள்ளூர் சிறுகடல் கிராமத்தை சேர்ந்தவர் பாலகிருஷ்ணன்(48). இவர் நாம் தமிழர் கட்சியில் ஐடி பிரிவில் உள்ளார். இவர் மனவளர்ச்சி குன்றிய தனது மகன் நித்திஷ்குமாருக்கு(9) மருந்து, மாத்திரைகள் வாங்க தனது பைக்கில் காக்களூர் – திருவள்ளூர் பைபாஸ் சாலையில் சென்றபோது சோதனைச் சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தினர். அங்கிருந்த திருவள்ளூர் தாலுகா போலீசார், தலைக்கவசம் அணியவில்லை எனக் கூறி மருந்து, மாத்திரை வாங்க வைத்திருந்த ₹500ஐ, அபராதமாக வாங்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, தனது மகனுக்கு மருந்து, மாத்திரை வாங்க வேண்டும் என்று திருப்பி கொடுக்கும்படி கேட்டுள்ளார். ஆனால் தர மறுத்ததால் வீட்டுக்கு திரும்பிய பாலகிருஷ்ணன், ‘கொரோனா நேரத்தில் போலீசார் அரஜாகம்’ செய்வதாக கூறி டிவிட்டரில் பதிவிட்டார். இந்த சம்பவம் வைரலான நிலையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தெரியவந்தது. உடனே முதல்வர் அலுவலகத்தில் இருந்து தொடர்பு கொண்டு என்ன உதவிகள் தேவையோ காவல் ஆய்வாளர் மூலம் கிடைக்க ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தனர். இது குறித்து திருவள்ளூர் தாலுகா காவல் ஆய்வாளருக்கு டிஜிபி அலுவலகம் உத்தரவிட்டிருந்தது. இதனைத் அவர், , சிறுகடல் கிராமத்திற்கு நேரில் சென்று பாலகிருஷ்ணனிடம் மன்னிப்பு கேட்டதோடு, மருந்து மாத்திரைகள் மற்றும் அபராதமாக வசூலித்த 500 திருப்பி அளித்தார். எனவே சுட்டுரையில் பதிவிட்ட செய்தி வைரலாகி முதல்வர் நடவடிக்கை எடுத்த சம்பவம் அந்த குடும்பத்தினரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பொதுமக்கள் தரப்பில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. …