குடியாத்தம், ஜூன் 2: குடியாத்தத்தில் சாராய வழக்கில் கைதாகி சிறைக்கு சென்றபோது போலீசாரிடம் இருந்து தப்பி ஓடிய வாலிபர் 9 மணி நேரத்தில் சிக்கினார். தொடர்ந்து போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த செட்டிகுப்பம் கிராமத்தில் சாராயம் விற்பனை செய்வதாக வேலூர் எஸ்பி அலுவலகத்திற்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் எஸ்பியின் உத்தரவின்படி நேற்று முன்தினம் குடியாத்தம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசார் செட்டிகுப்பம் பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு பாக்கெட் சாராயம் விற்பனை செய்து கொண்டு இருந்த சூர்யா(21) என்பவரை கையும் களவுமாக பிடித்தனர்.
பின்னர் வழக்குப்பதிவு செய்து குடியாத்தம் நீதிமன்றத்தில் நடுவர் முன் ஆஜர்படுத்தினர். அவரது உத்தரவின் பேரில் குடியாத்தம் தாலுகா அலுவலகத்தில் உள்ள கிளை சிறையில் அடைக்க சூரியவை போலீசார் நேற்று முன்தினம் இரவு அழைத்துச் சென்றனர். அப்போது திடீரென சூர்யா போலீஸ் பிடியிலிருந்து தப்பி ஓடிவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த போலீசார் சூர்யாவை இரவு முழுவதும் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர். இந்நிலையில் நேற்று காலை குடியாத்தம் அடுத்த லிங்குன்றம் கிராமத்தில் பதுங்கி இருந்த சூரியவை போலீசார் பிடித்தனர். தொடர்ந்து அவரிடம் குடியாத்தம் டவுன் இன்ஸ்பெக்டர் லட்சுமி மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.