Sunday, May 12, 2024
Home » போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் ஜெயலலிதா நினைவில்லம் ரத்து எதிர்த்து அதிமுக மேல் முறையீடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

போயஸ் கார்டன் வேதா நிலையத்தில் ஜெயலலிதா நினைவில்லம் ரத்து எதிர்த்து அதிமுக மேல் முறையீடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

by kannappan

சென்னை: ஜெயலலிதாவின் வீடான வேதா நிலையத்தை நினைவில்லமாக மாற்றிய அரசின் உத்தரவை ரத்து செய்த தீர்ப்பை எதிர்த்து அதிமுக தரப்பில் மேல் முறையீடு செய்யப்பட்டுள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் போயஸ்தோட்டத்தில் உள்ள வேதா நிலையம் இல்லத்தை அவரது நினைவு இல்லமாக மாற்றிய அரசின் நடவடிக்கைகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து நவ. 24ம் தேதி தீர்ப்பளித்தார். இதை எதிர்த்து மேல் முறையீடு செய்ய அனுமதி கோரி அதிமுக வழிகாட்டுதல் குழு உறுப்பினரும் ஜெயலலிதா நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினருமான சி.வி.சண்முகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். மேலும் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி மேல் முறையீடு மனுவையும் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுக்களில், புகழ்பெற்ற தலைவர்களின் இல்லங்களை நினைவு இல்லங்களாக மாற்றுவது புதிதல்ல. உலக தலைவர்கள் பலரின் இல்லங்கள் நினைவில்லங்களாக மாற்றப்பட்டுள்ளன. வேதா நிலையம் கையகப்படுத்திய உத்தரவை ரத்து செய்ததை எதிர்த்து மாநில அரசு மேல் முறையீடு செய்யவில்லை. நினைவு இல்ல அறக்கட்டளை உறுப்பினர் என்ற முறையில் மேல் முறையீடு செய்ய எனக்கு உரிமை உள்ளது. அதனால் மேல் முறையீடு செய்ய அனுமதி வழங்க வேண்டும். நினைவில்லமாக மாற்றுவது அரசு பணத்தை வீணடிக்கும் செயல் என்பன போன்ற தனி நீதிபதி கருத்துக்கள் தேவையற்றவை. இந்த தீர்ப்பு அதிமுக தொண்டர்களை புண்படுத்தியுள்ளது. நீதிமன்ற உத்தரவின்படி, வேதா நிலையம் இல்லத்தின் சாவியை ஜெயலலிதாவின் வாரிசுகளிடம் ஒப்படைத்து விட்டால் அது கட்சிக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்திவிடும். வேதா நிலையம் கையகப்படுத்தப்படும் முன் தீபா, தீபக் ஆகியோரிடம் கருத்துகள் கேட்கப்பட்டது. வேதா நிலையத்தை நினைவு இல்லமாக மாற்ற வேண்டியதன் அவசியம் குறித்த ஆதாரங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளபோதும், பொது பயன்பாடு இல்லை என்று தனி நீதிபதி முடிவுக்கு வந்திருக்க கூடாது. எனவே, தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் இவ்வாறு கூறப்பட்டிருந்தது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது….

You may also like

Leave a Comment

six − four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi