விருதுநகர், செப்.25: விருதுநகர்-சிவகாசி சாலையில் ஆமத்தூர் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் பாலமுரளிகிருஷ்ணன் தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். தனியார் கல்லூரி எதிரே உள்ள பேருந்து நிறுத்தத்தில் நின்றவரை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறியுள்ளார்.
இதனால் சந்தேகமடைந்த போலீசார், அவரிடம் நடத்திய சோதனையில், 100க்கும் மேற்பட்ட போதை மாத்திரைகள் இருந்தது கண்டறியப்பட்டது. விசாரணையில், அவர் அருப்புக்கோட்டை சொக்கலிங்கபுரத்தைச் சேர்ந்த யோகராஜ்(43) என தெரிய வந்தது. இதையடுத்து, போதை மாத்திரைகளை பறிமுதல் செய்த ஆமத்தூர் போலீசார் யோகராஜ் மீது வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.