காரைக்குடி : காரைக்குடி அருகே அரியக்குடி ரயில்வே கேட் அருகே இருந்து தேவகோட்டை ரஸ்தா வரை புதிதாக சுற்றுச்சாலை அமைப்பதற்கான சாத்தியகூறுகள் குறித்து ரயிலில் சென்று மாங்குடி எம்எல்ஏ ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறுகையில், ‘‘சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி மிகவும் வளர்ச்சியடைந்த பகுதியாக உள்ளது. வாகனங்கள் அதிகரிப்புக்கு ஏற்ப போதிய சாலை வசதியில்லாத நிலையே பல ஆண்டுகளாக தொடர்கிறது. இதனை போக்க புதிதாக சுற்றுச்சாலை அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். 4 கிலோ மீட்டர் தூரம் வரை இச்சாலை அமைப்பதற்கான செயல்வடிவம் தயாரிக்க சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு தெரிவித்து, எவ்வளவு நிதி செலவாகும் என பட்ஜெட் தயாரிக்கப்படும். இச்சாலை அமையும்பட்சத்தில் நகருக்குள் வாகனங்கள் வராமல் பைபாஸ் சாலை மூலம் இணைக்கப்பட்டு தேவகோட்டை, ராமேஸ்வரம் உள்பட பல்வேறு பகுதிகளுக்கு செல்வோர்களுக்கு வசதியாக இருக்கும். தவிர பள்ளி, கல்லூரி மாணவர்கள், வியாபாரிகளுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும் என்றார்.நெடுஞ்சாலைத்துறை ஓய்வு பெற்ற பொறியாளர் சந்திரபோஸ், கல்லல் வட்டார தலைவர் ரமேஷ், ஓய்வுபெற்ற ரயில்வே பணியாளர் தட்சிணாமூர்த்தி, சமூகஆர்வலர் சாய்தர்மராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜெயபிரகாஷ், மாஸ்மணி, கவி உள்பட பலர் உடன் சென்றனர்….