புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் கிராமத்தில் நடந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 716 காளைகள் சீறிப்பாய்ந்தன. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள கண்டியாநத்தம் இடையன் கண்மாயில் நேற்று காலை ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. அமைச்சர் மெய்யநாதன் கொடியசைத்து போட்டியை தொடங்கி வைத்தார். புதுக்கோட்டை, சிவகங்கை, மதுரை, திண்டுக்கல், தஞ்சாவூர், திருச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 716 காளைகள் போட்டியில் பங்கேற்றன. சீறிப்பாய்ந்து சென்ற காளைகளை 300 மாடுபிடி வீரர்கள் அடக்கினர். பிடிப்படாமல் சென்ற காளைகளுக்கும், காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கும் வெள்ளிக்காசு, பிரோ, கட்டில், குக்கர், மின்விசிறி, சில்வர் பாத்திரம், செல்போன், ஆடு, சைக்கிள், ரொக்கம் ஆகியவை பரிசாக வழங்கப்பட்டது.இந்த ஜல்லிக்கட்டில் 14 பேருக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்தவர்களுக்கு அரசு ஆரம்ப சுகாதார மருத்துவக்குழுவினர் முதலுதவி சிகிச்சை அளித்தனர். இதில் டிஆர்ஓ செல்வி, இந்திய கால்நடை நல வாரிய ஜல்லிக்கட்டு ஆய்வு குழு உறுப்பினர் மிட்டெல், இலுப்பூர் ஆர்டிஓ குழந்தைசாமி உள்ளிட்ட பலர் பலர் கலந்து கொண்டனர். ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை ரவிந்திரன் அம்பலம் தலைமையில் ஊர்பொதுமக்கள் மற்றும் இளைஞர்கள் செய்திருந்தனர். பொன்னமராவதி டிஎஸ்பி அப்துல்ரகுமான் தலைமையில் இன்ஸ்பெக்டர் தனபாலன் மற்றும் நூற்றுக்கணக்கான போலீசார் தீயணைப்புத் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டிருந்தனர். இலுப்பூர் கால்நடை உதவி இயக்குனர் பாண்டி தலைமையில் கால்நடை மருத்துவக் குழுவினர் காளைகளை பரிசோதனை செய்து வாடிவாசலுக்கு அனுப்பினர்….