பள்ளிப்பட்டு: பொதட்டூர்பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு பேரூராட்சி சார்பில் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில் தண்ணீர் பந்தல் திறப்பு விழா நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் பிரபுசங்கர் உத்தரவின் பேரில் பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் ஜெயக்குமார் தலைமையில் கோடையில் பொதுமக்களின் தாகத்தை தீர்க்கும் வகையில் கோடைகால தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பொதட்டூர்பேட்டை பேரூராட்சி அலுவலகம் அருகிலும், பேருந்து நிலையத்திலும் பேரூராட்சி செயல் அலுவலர் கலாதரன் நேற்று தண்ணீர் பந்தலை திறந்துவைத்தார். இதில் பேரூராட்சி இளநிலை உதவியாளர் முருகவேல் உட்பட பேரூராட்சி பணியாளர்கள் கலந்துகொண்டனர். இதேபோல், பள்ளிப்பட்டு பேரூராட்சி சார்பில் பேருந்து நிலையம், பேரூராட்சி அலுவலகம் அருகில் தண்ணீர் பந்தல் திறக்கப்பட்டது. பேரூராட்சி இளநிலை உதவியாளர் குப்பன், பேரூராட்சி பணியாளர்கள் பொதுமக்களுக்கு குடிநீர் வழங்கினர்.