ஈரோடு, ஜன. 21:ஈரோடு மூலப்பாளையம் என்ஜிஜிஓ நகரை சேர்ந்தவர் சிலம்பரசன் (32). இவர், ஈரோடு பெருந்துறை சாலை டீச்சர்ஸ் காலனியில் உள்ள தனியார் வங்கியில் மேலாளராக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 19ம் தேதி அவரது வங்கியின் வெளியே பைக்கை நிறுத்தி விட்டு உள்ளே சென்றார். பின்னர் சிலம்பரசன் சில மணி நேரம் கழித்து வந்து பார்த்தபோது அவரது பைக்கை காணவில்லை. அக்கம் பக்கம் தேடி பார்ததும் பைக் கிடைக்கவில்லை. இதுகுறித்து ஈரோடு வடக்கு போலீசில் சிலம்பரசன் அளித்த புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, மாயமான பைக்கை தேடி வந்தனர். இதற்கிடையில் நேற்று ஈரோடு அரசு மருத்துவமனை ரவுண்டானா அருகே சந்தேகப்படும்படியாக வந்த வாலிபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். அந்த வாலிபர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவரை ஈரோடு ஜிஹெச் போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து சென்று தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் அந்த வாலிபர் திருப்பூர் வள்ளிபுரம் குருவாயூரப்பன் நகரை சேர்ந்த ரமேஷ்குமார் (31) என்பதும், அவர் ஓட்டி வந்தது சிலம்பரசனின் பைக் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து ரமேஷ்குமாரை போலீசார் கைது செய்து, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைத்தனர்.