பேரையூர், நவ. 7: பேரையூர் அருகே விவசாயி ஒருவர் மின்சாரம் தாக்கி பரிதாபமாக பலியானார். பேரையூர் அருகேயுள்ளது வாழ்நாயக்கன்பட்டி. இந்த ஊரைச் சேர்ந்தவர் பால்ராஜ் (60). விவசாயியான இவர், நேற்று தனது தோட்டத்தில் தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றுள்ளார். அப்போது சாரல் மழை பெய்து கொண்டிருந்தது. இதற்கிடையே தோட்டத்தில் இருந்த மின்மோட்டாரை இயக்க சென்றபோது அங்கிருந்த மின்வயரில் மின்கசிவு ஏற்பட்டு இருந்துள்ளது. இது தெரியாமல் அவர் மோட்டாருக்கான சுவிட்சை தொட்டபோது மின்சாரம் அவரை தாக்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே பால்ராஜ் பரிதாபமாக இறந்துபோனார். வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பாததால் குடும்பத்தினர் தோட்டத்திற்கு தேடி வந்துள்ளனர். அப்போது மின் வயரை பிடித்தவாறு அவர் இறந்து கிடந்தது தெரியவந்தது. இது குறித்து தகவல் அறிந்த நாகையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து பால்ராஜ் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் அவரது மரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.