பேராவூரணி, மார்ச் 21: தஞ்சாவூர் பாராளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பேராவூரணி சட்டமன்ற தொகுதியில் வாக்குச் சாவடி மையங்களின் அடிப்படை வசதிகள் மற்றும் தேர்தல் பணிகள் குறித்து மண்டல அலுவலர்கள் மற்றும் வாக்குச்சாவடி நிலைய அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பேராவூரணி சட்டமன்ற தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் பூஷணகுமார் தலைமை வகித்தார். தஞ்சாவூர் மாவட்ட துணை கலெக்டர் விக்னேஸ்வர குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் வாக்குச்சாவடி மையங்களில் அடிப்படை வசதிகளான கட்டிடங்களின் உறுதித்தன்மை, மின் வசதி, குடிநீர் வசதி, கழிப்பறை வசதி ,மாற்றுத் திறனாளிகள் வாக்களிக்க சாய்வு தள வசதி குறித்து மண்டல அலுவலர்கள் வாக்குச்சாவடிக்கு சென்று ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப அறிவுறுத்தப்பட்டது. கூட்டத்தில் தாசில்தார் தெய்வானை,தேர்தல் துணை தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் தேர்தல் பிரிவு அலுவலர்கள் கலந்து கொண்டனர்