பேரணாம்பட்டு, மே 1: பேரணாம்பட்டு நகரில் பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை வீசி சென்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு நகரம் 4வது வார்டு பகுதியில் முகமது அனிஸ் முதல் தெருவில் அடையாளம் தெரியாத நபர் ஒருவர், அங்குள்ள குடிநீர் குழாய் அருகே பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை வைத்து விட்டு சென்றுள்ளார். இதை கண்ட எதிர் வீட்டினர் அந்த குழந்தையை மீட்டு திமுக 4வது வார்டு கவுன்சிலர் சுல்தான அப்துல் பாசித்துக்கு தகவல் தெரிவித்தனர்.
உடனே, அவர் பேரணாம்பட்டு நகர காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்து, இன்ஸ்பெக்டர் முத்துகுமாரிடம் அந்த குழந்தையை ஒப்படைத்தார். உடனே, அந்த குழந்தையை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து முதலுதவி சிகிச்சை அளித்தனர். மேலும், அங்கு போதிய வசதி இல்லாததால் பரிசோதனை செய்ய குடியாத்தம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து, பேரணாம்பட்டு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து 2 நாட்களே ஆன பச்சிளம் பெண் குழந்தையை வீசி சென்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.