ஊட்டி, ஆக.25: ஊட்டியில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு தினம், அண்ணல் அம்பேத்கர் மற்றும் கலைஞர் பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட பேச்சு, கட்டுரை போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் தமிழ்நாடு நாள் விழாவையொட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்கள் பங்கேற்ற கட்டுரை மற்றும் பேச்சு போட்டிகள் நடத்தப்பட்டன. இதேபோல், சட்டமேதை அம்பேத்கர், கலைஞர் பிறந்தநாளையொட்டி பள்ளி, கல்லூரிகளில் பயின்று வரும் மாணவர்கள் பங்கேற்ற பேச்சு போட்டி நடந்தது.
இதில், வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி ஊட்டியில் நடந்தது. இதில், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கீதா தலைமை வகித்து ரொக்க பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கினார். அதன்படி, தமிழ்நாடு நாள் பேச்சு மற்றும் கட்டுரை போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு ரூ.10,000, 2வது பரிசு ரூ.7,000, 3வது பரிசு ரூ.5,000 வழங்கப்பட்டது. தொடர்ந்து, அம்பேத்கர், கலைஞர் பிறந்த நாள் பேச்சு போட்டியில் வெற்றி பெற்ற பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனியாக ரொக்கப்பரிசு வழங்கப்பட்டது.
அதன்படி, முதல் பரிசாக தலா ரூ.5000, 2ம் பரிசாக ரூ.3000, 3ம் பரிசாக ரூ.2000 வழங்கப்பட்டது. பள்ளி மாணவர்களுக்குள் நடைபெற்ற போட்டியில் திறமையை வெளிப்படுத்திய அரசு பள்ளி மாணவர்கள் இருவர் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு தலா ரூ.2000 சிறப்பு பரிசு வழங்கப்பட்டது. மொத்தம் 22 மாணவர்கள் ரூ.92 ஆயிரத்திற்கான பரிசுத்தொகை மற்றும் சான்றிதழ்களை பெற்றனர். இந்த நிகழ்ச்சியில் தமிழ் வளர்ச்சி துணை இயக்குநர் புவனேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டனர்.