பொன்னமராவதி,ஏப்.7: பொன்னமராவதி-புதுவளவு பகுதியில் ஏசி,பிரிட்ஜ்,வாஷிங்மிசின் உள்ளிட்ட மின்சாதன பொருட்கள் பழுது நீக்கும் கடை ஒன்றில் மின் கசிவின் காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் வாடிக்கையாளர்கள் பழுது நீக்க கொடுத்த 2 லட்சம் ரூபாய் மதிப்புடைய மின் சாதனங்கள் தீயில் எரிந்து நாசமானது. பொன்னமராவதி புதுவளவு பகுதியில் இந்திரா நகரைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவரின் மகன் பெரியசாமி ஏசி, பிரிட்ஜ், வாஷிங் மெசின் உள்ளிட்ட மின்சாதன பொருட்களை பழுது நீக்கும் கடை ஒன்றை வைத்துள்ளார்.
நேற்று பழுது நீக்கும் பணிக்காக வெளியே சென்றுள்ளார்.அப்போது பூட்டி இருந்த கடையிலிருந்து புகையுடன் பட்டாசு போன்று சத்தம் கேட்டுள்ளது. அக்கம் பக்கத்தில் உள்ள கடையினர் அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதையடுத்து பெரியசாமி கடையை திறந்து பார்த்த பொழுது தீ கொளுத்து விட்டு எரிய தொடங்கியது. பொன்னமராவதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளார்.
இதன் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்பு படையினர் தீயை அணைத்து மேலும் தீ பரவாமல் கட்டுக்குள் கொண்டு வந்தனர். எனினும் வாடிக்கையாளர்கள் பழுது நீக்க கொடுத்திருந்த சுமார் ரூ.2 லட்சம் மதிப்புடைய ஏசி,பிரிட்ஜ் மற்றும் பழுது நீக்க வைத்திருந்த உதிரி பாகங்கள் அனைத்தும் தீயில் எரிந்து கருகியது. இது குறித்து பொன்னமராவதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.