உத்திரமேரூர்: உத்திரமேரூர் அருகே பெருநகர் கிராமத்தில் உள்ள அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. உத்திரமேரூர் அடுத்த பெருநகர் கிராமத்தில் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் பயிலும் மாணவ-மாணவிகளிடையே சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில், ‘சுற்றுச்சூழல் மன்றம்’ என்ற மன்றத்தினை துவக்கி, அதில் மாணவ-மாணவிகளை பொருப்பாளர்களாக நியமிக்கப்பட்டு, பள்ளி வளாகம் முழுவதும் சுற்றுச்சூழலை பாதுகாக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில், பள்ளி மாணவ-மாணவிகளின் சுற்றுச்சூழல் மன்றத்தின் சார்பில், பெருநகர் அரசினர் மாதிரி மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நேற்று நடைபெற்றது. இதில், பள்ளி பொறுப்பு தலைமை ஆசிரியை ராஜிவி தலைமை தாங்கினார். இந்நிகழ்ச்சியில், உதவி தலைமை ஆசிரியர் செல்வராஜ், பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நட்டு தொடங்கி வைத்தார். பின்னர் பள்ளி முழுவதும் பலன் தரும் பல்வேறு மரக்கன்றுகளை மாணவ-மாணவிகள் நட்டு வைத்தனர். இதனைதொடர்ந்து மரக்கன்றுகள் நடுவதால் ஏற்படும் நன்மைகள் அதனை பராமரிக்கும் முறைகள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், பள்ளி மாணவ – மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.