சேலம் : சேலம் – பெரியார் பல்கலைக்கழக வினாத்தாள் சர்ச்சை விவகாரத்தில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.சேலம் – பெரியார் பல்கலைக்கழகத்தின் கீழ் சேலம், நாமக்கல், தருமபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் 115 கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் நடைபெற்ற எம்.ஏ. வரலாறு செமஸ்டர் தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் தாழ்த்தப்பட்ட சாதி எது என கேள்வி கேட்கப்பட்டு, அதற்கு 4 பிரிவுகள் கொடுக்கப்பட்டுள்ளது. இதற்கு பலர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். சர்ச்சை குறித்து விளக்கம் அளித்துள்ள பல்கலைக்கழக துணை வேந்தர் ஜெகநாதன், கேள்வி தாள்களை ஆசிரியர்கள் தான் தயாரிக்கிறார்கள் என்றும் இந்த கேள்வியை தயாரித்தது யார் என்பது குறித்த விவரம் கேட்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதி குறித்து கேள்வி கேட்கப்பட்டது குறித்து விசாரிக்க, உயர்கல்வித்துறை உயர் அலுவலர் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘சேலம், பெரியார் பல்கலைக்கழகத்தில் முதுகலை வரலாறு பாடப்பிரிவுக்கு நடத்தப்பட்ட பருவத் தேர்வில் சாதியை குறித்து கேள்வி கேட்கப்பட்டுள்ளது குறித்து பல்வேறு ஊடகங்களில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்கேள்வி இடம்பெற்றது குறித்து உயர்கல்வித் துறை உயர் அலுவலர் நிலையில் குழு அமைக்கப்பட்டு உரிய விசாரணை மேற்கொண்டு அந்த விசாரணை அறிக்கையின் அடிப்படையில் தவறு செய்தவர்கள் மீது தகுந்த நடவடிக்கை துறை மூலமாக எடுக்கப்படும்,’என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. …