பெரம்பலூர்,ஜன.3: பெரம்பலூரில் அறிவுத் திருக்கோவில் மனவளக்கலை மன்றம் சார்பில் உலக அமைதி வேண்டி உலக நல வேள்வி விழா நடைபெற்றது. உலக அமைதி பெற்று உலக மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பதற்காக ஆண்டுதோறும் ஆங்கில புத்தாண்டு தினத்தன்று உலக நல வேள்வி விழா அனைத்து மன்றங்களிலும் நடைபெற வேண்டும் என்று உலக சமுதாய சேவா சங்கத்தின் வழிகாட்டுதலின் பேரில் அனைத்து மனவளக்கலை மன்றங்களிலும் நடைபெற்று வருகின்றது.
இதன்படி ஆங்கில புத்தாண்டு தினத்தையொட்டி பெரம்பலூர் பாலக்கரை அருகேயுள்ள அறிவுத்திருக்கோவில் மனவளக் கலை மன்றம் சார்பில் உலக நல வேள்வி விழா, மன்றத்தின் தலைவர் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. மன்றத்தின் செயலாளர் சாந்தகுமார் வரவேற்றார். தொடர்ந்து உலக அமைதி குறித்து அருள்நிதி பத்மாவதி சந்திரசேகரன் எடுத்துரைத்து பேசினார். உலக நல வேள்வியை ஸ்மார்ட் துணை தலைவர் மீரா நடத்தினார்.
அப்போது வாழ்க வையகம் வாழ்க வளமுடன் என்று 108 முறை தியான நிலையில் வாழ்த்தப்பட்டது. மேலும் ஜப்பானில் நடைபெற்ற நிலநடுக்கம் மற்றும் சுனாமி தாக்கத்தில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாமல், பாதுகாப்புக்காக வாழ்த்து கூறப்பட்டது. முடிவில் துணைத்தலைவர் டாக்டர் புவனேஸ்வரி நன்றி தெரிவித்தார். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் நடேசன் நகர், மேலப்புலியூர், அம்மாபாளையம் உள்ளிட்ட 23 இடங்களில் இந்நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் யோகா பேராசிரியர்கள், பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.