பெரம்பலூர்,செப்.4: தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் ஜீவாவின் 117வது பிறந்த நாள் விழா மற்றும் நூல் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. பெரம்பலூர் வெங்கடேசபுரம் பகுதியில் உள்ள தமிழ்நாடு அரசு அலுவலர் ஓய்வூதியர் சங்க கூட்ட அரங்கில், தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் சார்பில் ஜீவாவின் 117வது பிறந்தநாள் விழா மற்றும் நூல் அறிமுக விழா நிகழ்ச்சி நடைபெற்றது. தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் தலைவர் பாளை செல்வம் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் காப்பியன் வரவேற்றார்.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயராமன், மற்றும் மாநில குழு உறுப்பினர் ஞானசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் திராவிடர் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் தங்கராசு, நாளை விடியும் சிற்றிதழின் அரசியல் என்ற தலைப்பில் காப்பியன் எழுதிய நூலை அறிமுகம் செய்து வைத்து பேசினார். மேலும், ஜீவானந்தம் வாழ்வும் மரணமும் என்ற தலைப்பில் அரசு மேல்நிலைப்பள்ளி உதவி தலைமை ஆசிரியர் சபா சிலம்பரசன் சிறப்புரை ஆற்றினார். நிகழ்ச்சிகளில் முத்துசாமி, சிலம்பாட்டம் முருகேசன், புலவர் அரங்கநாடன், பாடகர் சீனி அறிவுமழை, பாவலர் தமிழோவியன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில் தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் கவிஞர் தாகிர்பாட்ஷா நன்றி தெரிவித்தார்.