சென்னை: சென்னை இபிஎஸ் ஓய்வூதியர்கள் நல சங்கம் தலைவர் கிருஷ்ணமூர்த்தி நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியா முழுவதும் சுமார் 64 லட்சம் பேர் ஓய்வூதியம் பெற்று வருகின்றனர். அதில் 30 லட்சம் பேர் மாதாந்திர ஓய்வூதியம் இன்றும் ரூ.1000 கீழ் தான் பெறுகின்றனர். பாஜ அரசு 2018ல் தொழிலாளர் நலத்துறை செயலாளர் தலைமையில் ஒரு உயர்மட்ட குழுவை அமைத்தது. அந்த குழு 2019ல் இபிஎஸ் பென்சனர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்த பரிந்துரை செய்துள்ளது. மத்திய தொழிலாளர் துறை அமைச்சரும், வருங்கால வைப்பு நிதியின் மத்திய அறங்காவலர் குழு மற்றும் தொழிலாளர் துறையின் நாடாளுமன்ற நிலைக்குழு என்று அனைத்து குழுக்களும் இபிஎஸ் ஓய்வூதியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தினை உயர்த்த பரிந்துரை செய்துள்ளது. இருப்பினும் இதுநாள் வரை இபிஎஸ் ஓய்வூதியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியம் உயர்த்தப்படவில்லை. ஓய்வூதியர்களின் குறைந்தபட்ச ஓய்வூதியத்தை உயர்த்திடவும், 2016ல் உச்ச நீதிமன்றம், சென்னை உயர்நீதி மன்றம், கேரளா உயர்நீதிமன்றம் உட்பட பல்வேறு நீதிமன்றங்களின் உத்தரவுகளை எதிர்த்து, மத்திய அரசும் இபிஓ-வும் தொடுத்துள்ள மேல் முறையீடு, மறுசீராய்வு மனுக்களை வாங்க கோரியும் இந்தியா முழுவதும் உள்ள ஓய்வூதியர்கள் அக்டோபர் 2ம் தேதி காந்தி பிறந்த நாளில் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து, சிலை முன்பு ஆர்பாட்டம் நடத்தி மனு அளிக்க அகில இந்திய ஒருங்கிணைப்பு குழு அறைகூவல் விடுத்துள்ளது. அதன்படி வரும் அக்டோபர் 2ம் தேதி மாலை 4 மணிக்கு சென்னையில் உள்ள அனைத்து ஓய்வூதியர் அமைப்புகளும் இணைந்து, மெரினா கடற்கரையில் உள்ள காந்திஜி சிலைக்கு மாலை அணிவித்து அவரின் பாதங்களில் எங்களது கோரிக்கையை சமர்பிக்க உள்ளோம். இவ்வாறு கூறினார்….