Wednesday, May 22, 2024
Home » பெண் கொலையான வழக்கில் 2 பேர் கைது 4 மாதங்களுக்கு பிறகு சிக்கினர் பேரணாம்பட்டு அருகே ஆடு மேய்க்க சென்ற படம் உண்டு

பெண் கொலையான வழக்கில் 2 பேர் கைது 4 மாதங்களுக்கு பிறகு சிக்கினர் பேரணாம்பட்டு அருகே ஆடு மேய்க்க சென்ற படம் உண்டு

by Karthik Yash

பேரணாம்பட்டு, நவ.4: வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு சாத்கர் பகுதியை சேர்ந்தவர் வளர்மதி(45). இவர் கடந்த ஜூலை மாதம் 7ம் தேதி அதே பகுதியில் உள்ள அலங்கார் மாங்கா தோப்பு நிலத்தில் ஆடுகளை மேய்க்க சென்றார்.
அப்போது, மர்ம நபர்கள் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்ததுடன், காதில் இருந்த கம்மலை அறுத்து எடுத்து சென்று இருந்தனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதுகுறித்து பேரணாம்பட்டு போலீசார் வழக்கு பதிந்து கொலையாளிகளை தீவிரமாக தேடிவந்தனர். விசாரணையில், கோட்டைக்காலனி அடுத்த சித்திக் நகரை சேர்ந்த புகழேந்தி(24), ஓணாங்குட்டையை சேர்ந்த ரவி(46) ஆகிய இருவரும் வளர்மதியை கொலை செய்தது தெரியவந்தது. இதில், ரவி ஏற்கனவே பல குற்றச்செயல்களில் ஈடுபட்டவர் என்பதும், திருட்டு வழக்கில் சிறையில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், புகழேந்தியை பேரணாம்பட்டு போலீசார் நேற்று கைது செய்தனர். விசாரணையில், புகழேந்தி, ரவி ஆகிய இருவரும் குடிப்பதற்கு பணம் இல்லாததால் ஆடுகளை திருடுவதற்கு முடிவெடுத்து உள்ளனர். சம்பவத்தன்று அலங்கார் மாங்கா தோப்பு அருகே மேய்ந்து கொண்டிருந்த வளர்மதியின் ஆட்டை திருடியுள்ளனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த வளர்மதி கூச்சலிட்டதால் 2 பேரும் சேர்ந்து, அவரது வாயை பொத்தி தாங்கள் வைத்திருந்த கத்தியை எடுத்து, கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு கம்மலுடன் தப்பிச்சென்றது தெரியவந்தது.

இதற்கிடையில், புகழேந்தி கைது செய்யப்பட்டதை அறிந்து அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் பேரணாம்பட்டு காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர். அப்போது, புகழேந்தியின் தந்தை ராமு(48), அவரது தம்பி சபாபதி ஆகிய இருவரும், தாங்கள் கேனில் கொண்டு வந்த பெட்ரோலை உடலில் ஊற்றிக்கொண்டு திடீரென தீக்குளிக்க முயற்சித்தனர். இதை பார்த்த போலீசார் உடனே அவர்களை தடுத்து நிறுத்தினர். தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் முத்துக்குமார், சப்- இன்ஸ்பெக்டர் சரத்குமார் மற்றும் போலீசார் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் காவல் நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையில், கைதான புகழேந்தியை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

You may also like

Leave a Comment

16 − fifteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi