விழுப்புரம், ஆக. 1: விழுப்புரத்தில் பெண்ணிடம் நூதன முறையில் ரூ.24 லட்சம் மோசடி செய்த மர்ம நபர்கள் குறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிராஜன் மனைவி கவிஇலக்கியா(29). ஆன்லைனில் பகுதிநேர வேலை தேடிக்கொண்டிருந்தபோது கடந்த 25ம் தேதி செல்போனில் தொடர்பு கொண்ட நபர் குறிப்பிட்ட ரெஸ்டாரன்டின் புகைப்படத்திற்கு 5ஸ்டார் ரேட் கொடுத்தால் ஒரு குறிப்பிட்ட தொகை வழங்கப்படும் என்பதை நம்பி முதலில் ரூ.300 பெற்றுள்ளார். பின்னர் 26ம் தேதி மீண்டும் தொடர்பு கொண்ட அந்த நபர் பிரிப்பெய்டுடாஸ்க் என்ற பெயரில் சிறிய தொகை முதலீடு செய்தால் டாஸ்க் முடித்தால் அதிக லாபம் பெறலாம் என்று கூறியதை நம்பி கவி இலக்கியா யூசர்ஐடி, பாஸ்வேர்ட் ஐடி கிரியேட் செய்து ரூ.5000 செலுத்தி ரூ.6,600 பெற்றுள்ளார். தொடர்ந்து அவர் கூறியதை நம்பிய கவிஇலக்கியா 11 தவணைகளில் ரூ.24,80,847 பணத்தை முதலீடு செய்துள்ளார். அவர் கூறியவர் டாஸ்க் முடித்த பிறகு பணத்தை திருப்பி கொடுக்காமல் அந்த நபர் ஏமாற்றியுள்ளார். பின்னர் தான் நூதன முறையில் மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து கவிஇலக்கியா அளித்த புகாரின் பேரில் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.