சென்னை: துரைப்பாக்கம் கண்ணகி நகரை சேர்ந்தவர் அருள் (எ) குள்ள அப்பு (26), ரவுடி. இவர், தற்போது தேனாம்பேட்டை தாமஸ் சாலையில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவரது சகோதரி தேவி (எ) ஜெனிபர் கண்ணகி நகரில் வசித்து வருகிறார். அருள் கடந்த 7ம் தேதி சகோதரி வீட்டிற்கு சென்றபோது, அதே பகுதியை சேர்ந்த ரவுடி தீஞ்ச சதீஷ் என்பவருடன் தகராறு ஏற்பட்டது. இதில் தீஞ்ச சதீஷ் நண்பருக்கு வெட்டு காயம் ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தீஞ்ச சதீஷ், நண்பர்களுடன் 2 நாட்களுக்கு முன் தேனாம்பேட்டையில் உள்ள அருள் வீட்டிற்கு வந்து அவரை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கியுள்ளார். பின்னர் அருள் நண்பர்களுடன் சேர்ந்து தீஞ்ச சதீஷை கொலை செய்துவிடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தீஞ்ச சதீஷ், நண்பர்கள் 2 பேருடன் நேற்று முன்தினம் இரவு தேனாம்பேட்டையில் உள்ள அருள் வீட்டின் ஜன்னல் வழியாக பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு தப்பியுள்ளார். வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏற்படவில்லை. தீயை பொதுமக்கள் அணைத்துள்ளனர். அன்று இரவே தீஞ்ச சதீஷ் கண்ணகி நகரில் உள்ள அருள் சகோதரி தேவி வீட்டிற்கு சென்று, அருள் இருக்கும் இடத்தை கேட்டு கடுமையாக தாக்கி, 2 சவரன் செயினை பறித்துவிட்டு, பெட்ரோல் குண்டும் வீசிவிட்டு சென்றுள்ளார். இதுகுறித்து கண்ணகி நகர் போலீசார் வழக்கு பதிந்து, பள்ளிக்கரணையில் பதுங்கி இருந்த தீஞ்ச சதீஷ் மற்றும் அவரது நண்பரை நேற்று கைது செய்தனர்….