நீடாமங்கலம், மே 3: புவி வெப்பமயமாதலை தடுக்க அதிக அளவில் மரக்கன்றுகள் நட வேண்டும் என்று நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கம் தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. நீடாமங்கலம் பல்நோக்கு சேவை இயக்கத்தின் பொதுக்குழு கூட்டம் தலைவர் பத்ம ராமன் தலைமையிலும் துணைத் தலைவர் ராஜேந்திரன், பொருளாளர் ரவிச்சந்திரன் முன்னிலையிலும் நேற்று முன் தினம் நடைபெற்றது . கூட்டத்தில் புவி வெப்பமயமாதலை தடுக்கும் முயற்சியில் நீடாமங்கலம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மரக்கன்றுகளை அதிக அளவில் நட்டு வளர்ப்பதற்கு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது .
இயக்க ஒருங்கிணைப்பாளர் நேரு மறைவிற்கு அஞ்சலி செலுத்தப்பட்டது . புதிய ஒருங்கிணைப்பாளராக வை.செல்வராஜ், துணைத் தலைவராக கேஆர்.செல்வராஜ், துணை செயலாளராக செந்தில்குமார் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இயக்கத்தின் 2023- 24ம் ஆண்டிற்கான வரவு செலவு கணக்குகள் சமர்ப்பிக்கப்பட்டது. நெகிழிப்பை பயன்பாடுகளை குறைத்தல், நீர்நிலை பாதுகாப்பு, குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துதல், சுற்றுச்சூழலை மாசுபாடு இல்லாமல் பாதுகாத்தல் தொடர்பாக பொதுமக்கள் மற்றும் மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டது. முன்னதாக செயலாளர் ஜெகதீஷ் பாபு வரவேற்றார். முடிவில் ஒருங்கிணைப்பாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.