Sunday, May 12, 2024
Home » புளியம்பட்டியில் சமூக ஒருங்கிணைப்பு கூட்டம் குடும்பத்தை மட்டுமின்றி தலைமுறையையும் பழிக்குப்பழி என்ற எண்ணம் அழித்து விடும் எஸ்பி பாலாஜி சரவணன் பேச்சு

புளியம்பட்டியில் சமூக ஒருங்கிணைப்பு கூட்டம் குடும்பத்தை மட்டுமின்றி தலைமுறையையும் பழிக்குப்பழி என்ற எண்ணம் அழித்து விடும் எஸ்பி பாலாஜி சரவணன் பேச்சு

by Karthik Yash

ஓட்டப்பிடாரம், ஆக. 10: பழிக்குப்பழி என்ற எண்ணம்தான் ஒரு குடும்பத்தை மட்டுமின்றி அவர்களின் தலைமுறையையும் அழித்து விடும் என்று புளியம்பட்டியில் நடந்த சமூக ஒருங்கிணைப்பு கூட்டத்தில் தூத்துக்குடி எஸ்பி பாலாஜிசரவணன் தெரிவித்தார். புளியம்பட்டி பகுதியில் மாவட்ட காவல் துறை சார்பில், பொதுமக்களுடனான சமூக ஒருங்கிணைப்பு கூட்டம் நடைபெற்றது. எஸ்பி பாலாஜிசரவணன் தலைமை வகித்து பேசியதாவது: கிராமங்களில் எந்தவித சண்டை சச்சரவு இல்லாமல் மக்கள் அமைதியான முறையில் வாழ்வதற்கும், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் என யாரும் குற்றச் செயல்களில் ஈடுபடாமல் குற்றமில்லா மாவட்டமாக தூத்துக்குடியை மாற்றுவதே இந்நிகழ்ச்சியின் நோக்கம். இளைஞர்கள் கோபத்தினால் குற்றச் செயல்களில் ஈடுபட்டு அவர்களது எதிர்காலத்தையே தொலைத்து விடுகிறார்கள். கோபத்தினால் குற்றச் செயலில் ஈடுபட்டு சிறை செல்பவனை விட, தனது குடும்பத்திற்காக தன்னை கட்டுப்படுத்தி பிறரிடம் அமைதியாகவும், ஒற்றுமையாகவும் இருப்பவன்தான் உண்மையான வீரன் ஆவான். தங்களது குழந்தைகளுக்கு நேர்மறையான சிந்தனைகளையும், கல்வியையும் கொடுப்பதுதான் பெற்றோர் அளிக்கும் மிகப்பெரிய சொத்தாகும்.

பழிக்குப்பழி என்ற எண்ணம்தான் ஒரு குடும்பத்தை மட்டுமல்லாது ஒரு தலைமுறையையும் அழித்து விடும். பழிக்குப்பழி என்ற எண்ணத்தை கைவிட்டு தனிப்பட்ட பிரச்னையை சாதி பிரச்னையாகவோ, பொது பிரச்னையாக ஆக்காமல் போலீசார் மூலம் சுமூகமாக தீர்ப்பதற்கு முயல வேண்டும். இளைஞர்களுக்கு போதை பழக்கத்தால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள், என்றார். தொடர்ந்து போலீசாருடன், பொதுமக்களும் சமூக நல்லிணக்கத்திற்கான உறுதிமொழி ஏற்றனர். இதில் புளியம்பட்டி, மணியாச்சி இன்ஸ்பெக்டர்கள் தர்மர், சுதந்திரதேவி, எஸ்ஐக்கள் சதீஷ் நாராயணன், ரமேஷ் குமார் மற்றும் போலீசார், பொதுமக்கள் கலந்து கொண்டனர். விழிப்புணர்வு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை மணியாச்சி டிஎஸ்பி லோகேஸ்வரன் தலைமையிலான போலீசார் செய்திருந்தனர்.

You may also like

Leave a Comment

ten + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi