புதுச்சேரி, நவ. 25: புதுச்சேரி அரவிந்தர் ஆசிரமம் உருவான தினத்தையொட்டி அரவிந்தர் மற்றும் அன்னை பயன்படுத்திய அறைகள் நேற்று பக்தர்கள் பார்வைக்கு திறக்கப்பட்டது. புதுச்சேரியில் 1926ம் ஆண்டு நவம்பர் 24ம் தேதி அரவிந்தர் ஆசிரமத்தை உருவாக்கினார். அரவிந்தரின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு ஆன்மீக பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அன்னை மீராவிடம், அரவிந்தர் ஆசிரம நிர்வாகத்தை ஒப்படைத்தார். இதையொட்டி ஆண்டுதோறும் நவ.26ம் தேதி அரவிந்தர் ஆசிரமம் உருவான தினம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஆசிரமம் உருவான தினத்தின் 98ம் ஆண்டு துவக்க விழா நேற்று கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி ஆசிரமத்தில் அரவிந்தர் மற்றும் அன்னை தங்கியிருந்த அறைகள் பக்தர்கள் பார்வைக்காக திறக்கப்பட்டது. அவர்களது சமாதி மலர்களால் அலங்கரிக்கப்பட்டு, வழிபடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. இதையொட்டி தமிழகம், புதுச்சேரி மட்டுமன்றி வெளிநாடுகள், வெளிமாநிலங்களிலிருந்து திரளான பக்தர்கள் அதிகாலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து, அரவிந்தர் மற்றும் அன்னை தங்கியிருந்த அறையையும், சமாதியையும் தரிசனம் செய்தனர். தொடர்ந்து, கூட்டு தியானத்திலும் அவர்கள் ஈடுபட்டனர்.