Wednesday, May 15, 2024
Home » புதுச்சேரி ரோடியர்பேட்டில் நாட்டு வெடிகுண்டு, கத்திகளுடன் பதுங்கியிருந்த 3 பேர் கும்பல் கைது விசாரணையில் திடுக் தகவல்

புதுச்சேரி ரோடியர்பேட்டில் நாட்டு வெடிகுண்டு, கத்திகளுடன் பதுங்கியிருந்த 3 பேர் கும்பல் கைது விசாரணையில் திடுக் தகவல்

by Karthik Yash

புதுச்சேரி, டிச. 30: புதுச்சேரி ரோடியர்பேட்டில் நாட்டு வெடிகுண்டு, கத்திகளுடன் பதுங்கியிருந்த 3 பேர் கும்பலை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் திடுக் தகவல் அம்பலமானது. புதுச்சேரியில் புத்தாண்டு முன்னெச்சரிக்கை பாதுகாப்பு பணிகளை காவல்துறை உயர் அதிகாரிகள் முடுக்கி விட்டுள்ளனர். இப்பணிகளை சட்டம்-ஒழுங்கு சீனியர் எஸ்.பி. நாரா.சைதன்யா நேற்று ஆய்வு மேற்கொண்டு பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார். அதன்படி நேற்று முன்தினம் இரவு உருளையன்பேட்டை இன்ஸ்பெக்டர் கில்டா சத்யநாராயணா, எஸ்ஐ சந்திரசேகரன் தலைமையிலான போலீசார் நகர பகுதியில் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இதனிடையே ரோடியர்பேட் பால்வாடி அருகே வெடிகுண்டு, கத்தியுடன் சந்தேகத்துக்கிடமாக ஒரு கும்பல் பதுங்கியிருப்பதாக உருளையன்பேட்டை போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு விரைந்த போலீசார் 4 பேர் கும்பலை சுற்றிவளைக்க முயன்றனர். அப்போது போலீஸ் வாகனத்தை கண்டதும் அதிலிருந்த ஒருவர் தப்பியோடிவிட்ட நிலையில் 3 பேரை மடக்கிப் பிடித்த போலீசார், அவர்களிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளிக்கவே சோதனையிட்டனர். அப்போது கத்திகள் மற்றும் நாட்டு வெடிகுண்டு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஒரு நாட்டு வெடிகுண்டையும், 3 கத்தியையும் பறிமுதல் செய்த போலீசார், பிடிபட்ட 3 பேரையும் காவல் நிலையம் அழைத்து சென்று அதிரடியாக விசாரித்தனர்.

விசாரணையில், அவர்கள் வாணரப்பேட்டை, விநாயகர் கோயில் வீதி சஞ்சய் (18), ரோடியர்பேட், முருகசாமி தோட்டம் சக்திவேல் (18), வாணரப்பேட்டை, அலைன் வீதி சுகுமார் (எ) காந்த் (18) என்பதும், தப்பியோடியது வாணரப்பேட்டை சஞ்சீவ் (20) என்பதும் அம்பலமானது. சமீபத்தில் தங்களது கூட்டாளியான சந்தோஷை தாக்கிய பெரியகடை காவல் சரகத்துக்குட்பட்ட ரவுடி காக்காமுட்டை மணிகண்டனை தீர்த்துக்கட்ட நாட்டு வெடிகுண்டு மற்றும் கத்திகளுடன் பதுங்கியிருந்தது தெரியவந்தது இதையடுத்து 4 பேர் கும்பல் மீதும் வெடிகுண்டு பதுக்கல் பிரிவின் கீழ் வழக்குப்பதிந்த போலீசார் பிடிபட்ட 3 பேரையும் மாஜிஸ்திரேட் முன்பு ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். தலைமறைவான சஞ்சீவ்வை தீவிரமாக ேதடி வருகின்றனர். கைதானவர்களில் சுகுமார் (எ) காந்த் மீது கொலை முயற்சி, அடிதடி, போக்சோ உள்ளிட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

வீச்சரிவாளுடன் சிக்கிய ரவுடி
நண்பரை தாக்கியதற்கு பழிவாங்க வெடிகுண்டு, கத்திகளுடன் 3 பேர் கும்பல் சிக்கிய நிலையில் இவர்களது எதிரியான கண்டாக்டர் தோட்டம், பிரியதர்ஷினி நகரில் வசிக்கும் ரவுடி காக்காமுட்டை மணிகண்டன் நேற்று முன்தினம் இரவு உப்பளம், புதிய துறைமுகம் எக்ஸ்போ மைதானம் அருகே வீச்சரிவாளுடன் ஒதியஞ்சாலை போலீஸ் வசம் சிக்கினார். அவரிடமிருந்த வீச்சரிவாளை பறிமுதல் செய்த போலீசார், ரவுடி காக்கா முட்டை மணிகண்டன் மீது வழக்குப்பதிந்து கைது செய்து உடனடியாக சிறையில் அடைத்தனர். ஒதியஞ்சாலை ரவுடிகள் பட்டியலில் காக்கா முட்டை மணிகண்டன் பெயர் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

eleven − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi