கடலூர், மார்ச் 3: புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மது பாட்டில்கள் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து சுமார் ஆயிரம் மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
கடலூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரியா தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் மற்றும் போலீசார் நேற்றுமுன்தினம் இரவு கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் மோட்டார் சைக்கிளில் புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு மதுபாட்டில்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது.
இதன் பின்னர் இருவரையும் போலீசார் கலால் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை நடத்திய போது, கீழ்பரிக்கல்பட்டை சேர்ந்த சூர்யா(30), பாகூரை சேர்ந்த சுரேஷ்குமார் (30) என தெரியவந்தது.
இதில் சுரேஷ்குமாரிடம் இருந்து சுமார் 90 மில்லி அளவுள்ள 600 மது பாட்டில்களையும், சூர்யாவிடம் இருந்து 400 மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் சாராய பாக்கெட்டுகளையும் பறிமுதல் செய்து இருவரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்கள் கொடுத்த தகவலின் பேரில் மது பாட்டில்களை வாங்கி விற்பனை செய்யும் கீழ் பூவாணிகுப்பத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி ஜெயப்பிரதா(55) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். போலீசாரின் சோதனையில் சுமார் 1000 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது.