புதுக்கோட்டை, ஆக.23: புதுக்கோட்டை நகராட்சி சார்பில் ரூ.1.94 கோடி மதிப்பீட்டில் காந்தி பூங்கா அருகே போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கான பயிற்சி வகுப்புகளுடன் கூடிய 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட பல்வேறு வகையான புத்தகங்கள் இடம்பெற உள்ள மாவட்டத்தின் முதல் டிஜிட்டல் நூலகத்தின் கட்டுமான பணியை புதுக்கோட்டை நகர் மன்ற தலைவர் திலகவதி செந்தில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். புதுக்கோட்டை நகராட்சிக்கு உட்பட்ட காந்தி பூங்கா அருகே புதுக்கோட்டை நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1.94 கோடி மதிப்பீட்டில் அறிவு சார் மையம் போட்டி தேர்வுக்கு தயாராகுபவர்களுக்கான பயிற்சி வகுப்புகளுடன் டிஜிட்டல் நூலகம் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் கட்டப்பட்டு வரும் நூலக பணிகளை புதுக்கோட்டை நகர்மன்ற தலைவர் திலகவதி செந்தில், நகர் மன்ற துணை தலைவர் லியாகத் அலி, நகராட்சி அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் இரண்டு தளங்களாக கட்டப்பட்டு வரும் நூலகத்தில் 11 கணினிகள், 3 ஆயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் பொது அறிவுத்திறனை வளர்த்துக் கொள்வதற்காக பல்வேறு பயிற்சி வகுப்புகள் உள்ளிட்டவைகள் இந்த நூலகத்தில் அமைய உள்ளது. மேலும் புதுக்கோட்டை நகராட்சி சார்பில் புது பொலிவுடன் கட்டப்பட்டு வரும் இந்த நூலகத்தினை விரைவில் தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளி காட்சி மூலமாக திறந்து வைக்கிறார்.
அதற்கான பணிகள் தற்பொழுது மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் புதுக்கோட்டை மாவட்டத்திலேயே இரண்டு தளங்கள் கொண்டு டிஜிட்டல் முறையில் கட்டப்பட்டு வரும் முதல் நூலகம் என்பது குறிப்பிடத்தக்கது.