ஜெயங்கொண்டம்,செப்.4: புதுக்குடி கரைமேட்டில் சமயபுரம் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஜெயங்கொண்டம் அருகே உள்ள புதுக்குடி தெற்கு கரைமேடு கிராமத்தில் ஜலகண்ட விநாயகர் சமயபுரத்து மாரியம்மன், முருகன் கோயில் கும்பாபிஷேகம் நேற்று காலை நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், வாஸ்து சாந்தி, மாலை அங்குரார் பணம், ரக்ஷா பந்தன், கும்ப அலங்காரம் யாக சாலை பிரவேசம் பூரணாகுதி தீப ஆராதனை உள்ளிட்டவை நடைபெற்றன.
இரவு 10 மணிக்கு அக்ஷபந்தனை மருந்து சாத்துதல் நடைபெற்றது.
நேற்று காலை யாக பூஜை, நாடி சந்தானம், பூர்ணாகுதி, காலை 9 மணிக்கு ஜலகண்ட விநாயகருக்கு அபிஷேகமும் பின்னர் பத்து மணி அளவில் சமயபுரத்து மாரியம்மன், முருகனுக்கு கும்பாபிஷேகமும் நடைபெற்றது. காலையில் பக்தர்களுக்கு அன்னதானமும் மாலையில் அம்மன் வீதி உலா நிகழ்ச்சியும், நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை காண புதுக்குடி தெற்கு கரைமேடு, செங்குந்தபுரம், சூரியமணல், இலையூர், வாரியங்காவல், தேவனூர், மேலூர் உள்ளிட்ட சுற்று வட்டார கிராம பொதுமக்கள் ஏராளமானோர் கும்பாபிஷேகத்தை கண்டு அம்மனின் அருள் பெற்றனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை தர்மகர்த்தாக்கள் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் செய்திருந்தனர்.