புதுக்கோட்டை நவ.18: குழந்தைகள் தின விழாவை முன்னிட்டு அஞ்சல் அலுவலகங்களில் செல்வமகள் சேமிப்பு திட்டம் மற்றும் பொன்மகன் சேமிப்பு திட்டம் ஆகிய சேமிப்பு திட்டங்களில் குழந்தைகளை சேர்ப்பதற்கான சிறப்பு முகாம் புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அனைத்து அஞ்சலகங்களிலும் வரும் நவம்பர் 30ம் தேதி வரை நடைபெறுகிறது. 10 வயதிற்குட்பட்ட பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் சேரலாம்.
குறைந்தபட்சம் ரூ.250 செலுத்தி குழந்தைகளுக்கு கணக்கு தொடங்கலாம். ஒரு நிதியாண்டிற்கு அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 50ஆயிரம் வரை சேமிக்கலாம்.முதிர்வு காலம் 21 ஆண்டுகள், வருடாந்திர கூட்டு வட்டி 8 சதவீதம் (மாறுதலுக்கு உட்பட்டது) ஆகும். வயது வரம்பின்றி அனைவரும் இத்திட்டத்தில் சேரலாம். குறைந்தபட்சம் ரூ.500 செலுத்தி இத்திட்டத்தில் சேரலாம். ஒரு நிதியாண்டிற்கு அதிகபட்சம் ரூ.1 லட்சத்து 50ஆயிரம் வரை சேமிக்கலாம்.
முதிர்வு காலம் 15 ஆண்டுகள் வருடாந்திர கூட்டு வட்டி 7.1 சதவிதம் (மாறுதலுக்கு உட்பட்டது) ஆகும். இந்த இரண்டு திட்டங்களுக்கும் 80சி இன் கீழ் வருமான வரி விலக்கு உண்டு. எனவே பொதுமக்கள் அனைவரும் தங்கள் குழந்தைகளின் எதிர்கால சேமிப்பிற்காக பெண் குழந்தைகளுக்கு செல்வமகள் சேமிப்பு கணக்கு மற்றும் ஆண் குழந்தைகளுக்கு பொன்மகன் சேமிப்பு கணக்கு திட்டங்களில் சேர்ந்து பயனடையலாம். இவ்வாறு அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர் முருகேசன் கூறினார்.