புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே அரசர்குளம் கீழ்பாதி அம்பேத்கர் நகரை சேர்ந்த தியாகராஜன் மகன் தமிழ்செல்வன் (28). கீரமங்கலம் காவல்நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்தார். கடந்த 4 மாதத்திற்கு முன் புதுக்கோட்டை மாவட்டம் வடகாடு பகுதியை சேர்ந்த அபீனா என்பவருடன் தமிழ்செல்வனுக்கு திருமணம் நடந்தது. கடந்த 4 நாட்களுக்கு முன்பு தனது மனைவியை வடகாட்டில் உள்ள அவரது பெற்றோர் வீட்டிற்கு அழைத்து சென்று, அங்கு விட்டுவிட்டு வந்துள்ளார்.நேற்று முன்தினம் இரவு தமிழ்செல்வன், தனது வீட்டில் உள்ள அறையில் தூங்க சென்றார். நேற்று காலையில் தமிழ்செல்வனை செல்போனில் தொடர்பு கொண்டார் அபீனா. போனை எடுக்கவில்லை. பலமுறை முயற்சித்தும் போனை எடுக்காததால் பக்கத்து வீட்டில் இருந்த தனது தோழியை தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். உடனே அவரும் சென்று பெற்றோரிடம் தெரிவித்தார். இதனால் பதற்றத்துடன் தமிழ்செல்வன் அறைக்குள் பெற்றோர் சென்றனர். வாயில் நுரை தள்ளிய நிலையில் கிடந்தார். அதிர்ச்சியுடன், அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தமிழ்செல்வனை, அறந்தாங்கியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பரிசோதித்த மருத்துவர்கள், ஏற்கனவே தமிழ்செல்வன் இறந்து விட்டதாகவும், அவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டதாகவும் தெரிவித்தனர்.தகவலறிந்த நாகுடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். தமிழ்செல்வனின் அறையில், அவர் கைப்பட எழுதி கையொப்பமிட்ட கடிதம் இருந்தது. அதில், ‘எனக்கு வாழ பிடிக்கவில்லை. மன வேதனையுடனும், மன வருத்தத்துடனும் இருக்கிறேன். எனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை’ என எழுதியிருந்தது. அதை கைப்பற்றினர். பின்னர் வழக்கு பதிந்து விசாரித்தனர். கணவன், மனைவிக்கு இடையே தகராறு இருந்துள்ளதும், அதனால் தமிழ் செல்வன் தற்கொலை செய்து கொண்டதும் தெரியவந்துள்ளது. தொடர்ந்து விசாரணை நடக்கிறது….