கரூர் : கருர் மாவட்டம் குளித்தலை ஊராட்சி ஒன்றியம் கே.பேட்டை, மணத்தட்டை, வைகைநல்லூர் ஆகிய பகுதிகளில் செயல்படுத்தப்படும் பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகள் குறித்து கலெக்டர் பிரபு சங்கர் நேரில் பார்வையிட்டார். அதில், குறிப்பாக உழவர் நலன் மற்றும் வேளாண்மைத்துறையின் சார்பில், இரணியமங்கலத்தில் நீடித்த பசுமை போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் மூலம் தேக்கு, செம்மரம், மகோனி உள்ளிட்ட பல்வேறு வகையான மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டுள்ள தனியார் நிலத்தையும் கலெக்டர் பார்வையிட்டார்.பின்னர் இந்த ஆய்வு குறித்து கலெக்டர் தெரிவித்துள்ளதாவது:கரூர் மாவட்டத்தில் விவசாயிகளின் நலன் காக்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. ஒரு லட்சம் விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கும் திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திடடம், முதல்வரின் மானாவாரி நிலமேம்பாட்டு இயக்கம், இயற்கை வேளாண் வளர்ச்சித்திட்டம், பாரம்பரிய நெல் ரகங்களை பாதுகாத்தல், பனைமேம்பாட்டு இயக்கம், சிறுதானிய இயக்கம், கூடுதலாக்கப்பட்ட நெல் கொள்முதல் விலை, ஊட்டம் தரும் காய்கறி தோட்டம் திட்டம், சூரியசக்தி பம்ப்செட்டுகள் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் அனைத்து விவசாயிகளும் போற்றத்தக்க திட்டமாக இருந்து வருகிறது.அந்த வகையில், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் கூடுதல் வருமானமும், வேலை வாய்ப்பு கிடைக்கச் செய்வதோடு மட்டுமின்றி, தமிழ்நாட்டின் சூற்றுச்சூழலை பாதுகாத்திடவும், விவசாய நிலங்களில் நிரந்தர பசுமை சூழ்நிலையை உருவாக்குவதற்கும் தமிழ்நாடு விவசாய நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் என்ற புதிய வேளாண் காடு வளர்ப்பு திட்டத்தை தமிழக முதல்வர் செயல்படுத்தியுள்ளார்.கரூர் மாவட்டத்தில் இந்த திட்டத்தின்கீழ் முதற்கட்டமாக 2.40லட்சம் மரக்கன்றுகள் மரம் சார்ந்த விவசாயத்தை ஊக்குவித்திட விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு, விவசாய நிலங்களின் வரப்புகளிலும், குறைந்த செலவில் விவசாய நிலங்களிலும் நடவு செய்யப்பட்டுள்ளது.விவசாயிகள் மரக்கன்றுகளை பெறுவதற்காக உழவர் செயலியில் தாங்களாகவே பதிவு செய்தோ, அருகில் உள்ள வேளாண்மை விரிவாக்க மையத்தில் பதிவு செய்து வேளாண்மைத்துறையின் பரிந்துரையின்படி தேவையான மரக்கன்றுகளை அருகில் உள்ள தமிழ்நாடு வனத்துறையின் நாற்றாங்காலில் இருந்து இலவசமாக பெற்று தங்கள் நிலத்தில் நடவு செய்யும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.மேலும், இந்த திட்டத்தின்கீழ் பயனாளிகள் தேர்வு, மரக்கன்றுகள் விநியோகம் மற்றும் நடவுப் பணிகள் சிறப்பாக செயல்படுத்தபடுவதை அரசு இணைய தள செயலி வாயிலாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தினால் வரும்காலங்களில் விவசாயிகளுக்கு ஒரு நிரந்தர வைப்புத் தொகை கிடைப்பதுடன், விவசாய நிலங்களின் மண் வளமும் அதிகரிப்பதோடு, மாநிலத்தின் பசுமை பரப்பும், சுற்றுப்புறச் சூழலும் மேம்படுத்தப்படும் என்றார். நிகழ்வின் போது, திட்ட இயக்குநர் மந்திராச்சலம், செயற்பொறியாளர் பாலகிருஷ்ணன், குளித்தலை வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அரவிந்தன் உட்பட அனைவரும் கலந்து கொண்டனர்….
புதிய வேளாண்காடு வளர்ப்பு திட்டத்தில் விவசாயிகளுக்கு 2.40 லட்சம் மரக்கன்றுகள் வழங்கப்பட்டுள்ளது-கலெக்டர் தகவல்
previous post