சேந்தமங்கலம், மே 5: புதன்சந்தை மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழாவையொட்டி பக்தர்கள் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக வந்தனர். புதுச்சத்திரம் அடுத்துள்ள புதன்சந்தை மாரியம்மன் கோயிலில் சித்திரை திருவிழா, கடந்த சில நாட்களுக்கு முன்பு கம்பம் நடுதலுடன் தொடங்கியது. தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்று வந்தது. நேற்று முன்தினம் இரவு, அம்மன் குதிரை வாகனத்தில் வீதியுலா எழுந்தருளினார். நேற்று கோயில் வளாகத்தில் ஏராளமான பெண்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்து வந்தும் வழிபட்டனர்.
மேலும், பக்தர்கள் அலகு குத்தி நேர்த்திக்கடன் செலுத்தினர். சுமார் 500க்கும் மேற்பட்டோர் அக்னி சட்டி எடுத்து ஊர்வலமாக கோயிலுக்கு வந்தனர். இன்று 108 சங்காபிஷேகம், பால்குட ஊர்வலம், வண்டி வேடிக்கை உள்ளிட்டவை நடைபெறுகிறது. நாளை (சனிக்கிழமை) இரவு அலங்கரிக்கப்பட்ட மலர் ரதத்தில் அம்மன் திருவீதி உலா, வான வேடிக்கை, கரகாட்டம், குறவன் குறத்தி உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. மாலையில் மஞ்சள் நீராட்டு விழாவுடன் கம்பம் பிடுங்குதல் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை ஊர் தர்மகர்த்தா மற்றும் பொதுமக்கள் செய்து வருகின்றனர்.