சிவகாசி, பிப். 3: சிவகாசி மாநகராட்சி பகுதிகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பதுக்கிய 3 கடைகளுக்கு மாநகராட்சி அதிகாரிகள் ரூ.22 ஆயிரம் அபராதம் விதித்தனர். சிவகாசி மாநகராட்சி பகுதியில் மாநகராட்சி ஆணையாளர் கிருஷ்ணமூர்த்தி உத்தரவின் பேரில் மாநகராட்சியில் உள்ள முக்கியமான வீதியில் உள்ள கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா என மாநகராட்சி சுகாதார அலுவலர்கள் திருப்பதி, பகவதிபெருமாள், ராஜா மற்றும் சுகாதார ஆய்வாளர் அபுபக்கர்சித்திக் மற்றும் தூய்மை இந்தியா திட்ட பரப்புரையாளர்கள் அடங்கிய குழு கடந்த 2 நாட்களாக சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று பை-பாஸ் ரோடு, பி.கே.என் ரோடு, பி.கே.எஸ்.ஆறுமுகநாடார் ரோடு ஆகிய பகுதிகளில் இயங்கி வரும் 15 கடைகளில் சோதனை நடத்தினர். இதில் 3 கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் ரூ.22 ஆயிரம் அபராதம் விதித்தனர். சிவகாசி மாநகராட்சியில் பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிப்பதோ, விற்பனை செய்வதோ, பதுக்கி வைத்திருப்பதோ தெரிய வந்தால் காவல்துறை மூலம் ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி நிர்வாகம் எச்சரித்துள்ளது.