கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியை பிளாஸ்டிக் பயன்பாடு இல்லாத நகராட்சியாக உருவாக்க வேண்டும் என பொதுமக்களுக்கு நகர்மன்ற தலைவர் பரிதாநவாப் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: கிருஷ்ணகிரி நகராட்சிக்கு செலுத்த வேண்டிய 2023-2024ம் ஆண்டிற்கான சொத்து வரியை, இன்றைக்குள் (30ம்தேதி) செலுத்துபவர்களுக்கு 5 சதவீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அறிவித்த முதல்வருக்கு நன்றி. கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.19.72 கோடி தொகை நிலுவை இருந்தது. 2022-2023ம் ஆண்டில் ரூ.13.62 கோடி வரிவசூல் செய்யப்பட்டுள்ளது. உரிய முறையில் சொத்து வரியை செலுத்திய மக்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
கிருஷ்ணகிரி நகராட்சியை பிளாஸ்டிக் இல்லாத நகராட்சியாக உருவாக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து, பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. நகராட்சி எல்லையில் நாள்தோறும் ஒன்றரை டன் பிளாஸ்டிக் சேகரிக்கப்படுகிறது. இதனை மக்கும், மக்காத பிளாஸ்டிக் என தரம் பிரித்து வருகிறோம். கிருஷ்ணகிரியை பிளாஸ்டிக் இல்லாத நகரம் ஆக்க, பொதுமக்கள் ஒத்துழைப்பு தரவேண்டும். இவ்வாறு நகர்மன்ற தலைவர் தெரிவித்தார். அப்போது நகராட்சி கமிஷனர் வசந்தி உடனிருந்தார்.