Wednesday, May 8, 2024
Home » பிரபல யூடியூபர் இர்பானின் கார் மோதி தனியார் கல்லூரி பெண் காவலாளி பரிதாப பலி: டிரைவர் கைது

பிரபல யூடியூபர் இர்பானின் கார் மோதி தனியார் கல்லூரி பெண் காவலாளி பரிதாப பலி: டிரைவர் கைது

by Karthik Yash

சென்னை, மே 27:கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி அருகே, கோனாதி முரளி நகரை சேர்ந்தவர் பத்மாவதி (55). இவர் பொத்தேரியில் உள்ள தனியார் கல்லூரியில் செக்யூரிட்டியாக பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு, வேலை முடிந்ததும், மறைமலைநகரில் உள்ள தனது மகள் வீட்டிற்கு புறப்பட்டார். பின்னர், அங்கிருந்து, கோனாதியில் உள்ள தனது வீட்டிற்கு செல்வதற்காக, மறைமலை நகரில் உள்ள நகராட்சி அலுவலகம் அருகே, திருச்சி – சென்னை தேசிய நெடுஞ்சாலையை கடக்க முயன்றார். அப்போது, அசுர வேகத்தில் வந்த சொகுசு கார் ஒன்று பத்மாவதி மீது, பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர், சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த கூடுவாஞ்சேரி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், பத்மாவதியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், இதுதொடர்பாக, வழக்கு பதிவு செய்து விசாரித்தனர். முதற்கட்ட விசாரணையில், விபத்துக்கு காரணமான சொகுசு கார் பிரபல யுடியூபர் இர்பானின் பெயரில் உள்ளதும், விபத்து நடந்த இடத்தில் இர்பானை பொதுமக்கள் பார்த்ததாகவும் கூறியது தெரிய வந்துள்ளது. இந்நிலையில், இர்பானின் காரை ஓட்டி வந்ததாக, சென்னை சித்தாலப்பாக்கத்தை சேர்ந்த அசாருதீன் (34) என்பவரை கைது செய்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் தொடர்பாக, தாம்பரம் மாநகர போக்குவரத்து புலனாய்வு பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில், இந்த சொகுசு கார் பிரபல யுடியூபர் இர்பானுக்கு சொந்தமானது உறுதி செய்யப்பட்டது. இந்த விபத்து சம்பவம் நடந்த போது யுடியூபர் இர்பான் காரில் இருந்தாரா, அசாரூதின் காரை ஓட்டி வரும்போது மதுபோதையில் இருந்தரா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

5 × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi