புதுடெல்லி: பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படலாம் என்று கூறப்படும் நிலையில், புதியதாக 28 பேர் வரை அமைச்சர்களாக சேர்க்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த 2019ல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 2வது முறையாக வெற்றிபெற்றது. அப்போது பிரதமர் மோடி உட்பட 58 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றுக்கொண்டனர். இவர்களில் 2 அமைச்சர்கள் இறந்துவிட்டனர். 2 அமைச்சர்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இரண்டாவது முறை பாஜக ஆட்சி இரண்டாண்டு முடிந்த நிலையில், இதுவரை அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படவில்லை. பொதுவாக மத்திய அமைச்சரவையில் 81 பேர் வரை இடம்பெற முடியும் என்ற நிலையில், அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், உத்தரபிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, குஜராத், இமாச்சல் பிரதேசம், மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் அடுத்தாண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெறவுள்ளதால், அந்த மாநில பிரதிநிதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் அமைச்சரவை மாற்றம் இருக்கலாம் என்று தகவல்கள் கூறுகின்றன. அதேநேரம், ஏற்கனவே கூடுதல் இலாகாக்களை கவனித்து வருபவர்கள் மற்றும் செயல்படாத அமைச்சர்களிடம் இருந்து பதவி, துறைகள் பறிக்கப்படலாம் அல்லது மாற்றப்படலாம் என்றும் கூறப்படுகிறது. ேமலும் புதியவர்கள் பலருக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் கூறப்படுகிறது. பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணி தலைவர்கள் அடிக்கடி சந்தித்து ஆலோசனைகளை நடத்தி வருகின்றனர். அதனால், எப்போது வேண்டுமானாலும் அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பான அறிவிப்பு வெளியாகலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பிரதமர் அலுவலக வட்டாரங்கள் கூறுகையில், ‘புதிய அமைச்சரவை பட்டியலில் மேனகா காந்தியின் மகன் வருண் காந்தி, ராம்சங்கர் கதேரியா, அனில் ஜெயின், ரீட்டா பாகுனா ஜோஷி, ஜாபர் இஸ்லாம், அப்னா தளத்தின் அனுப்ரியா படேல், உத்தரகண்ட் மாநிலத்தின் அஜய் பட், அனில் பலூனி, கர்நாடகாவின் பிரதாப் சிம்ஹா, மேற்குவங்கத்தை சேர்ந்த ஜகந்நாத் சர்க்கார், சாந்தனு தாக்கூர், நிதீத் பிரமானிக் ஆகியோர் உள்ளனர். மேலும், பிரிஜேந்திர சிங் (அரியானா), ராகுல் கஸ்வான் (ராஜஸ்தான்), அஸ்வானி வைஷ்ணவ் (ஒடிசா), பூனம் மகாஜன் அல்லது பிரிதம் முண்டே (மகாராஷ்டிரா), மீனாட்சி லேகி (டெல்லி) ஆகியோரது பெயர்களும் பரிசீலனையில் உள்ளன. கூடுதல் இலாக்காகளை கவனித்து வரும் ஒன்பது அமைச்சர்களான பிரகாஷ் ஜவடேகர், பியூஷ் கோயல், தர்மேந்திர பிரதான், நிதின் கட்கரி, ஹர்ஷ் வர்தன், நரேந்திர சிங் தோமர், ரவிசங்கர் பிரசாத், ஸ்மிருதி இரானி, ஹர்தீப் சிங் பூரி ஆகியோரிடம் இருந்து சில துறைகள் பறிக்கப்படும். மத்திய அமைச்சரவையில் 81 பேர் வரை இடம்பெறலாம் என்ற நிலையில், தற்போது 53 பேர் மட்டுமே அமைச்சர்களாக உள்ளனர். அதனால், புதியதாக 28 அமைச்சர்கள் வரை சேர்க்க வாய்ப்புள்ளது’ என்று தெரிவிக்கின்றன….