சென்னை: ஆர்.கே.நகர் தேர்தலில் ஜெயலலிதா உருவ பொம்மையை வைத்து பிரசாரத்தில் ஈடுபட்ட முன்னாள் எம்.எல்.ஏ பாண்டியராஜன் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2017ல் நடந்த ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ். அணியின் வேட்பாளரான மதுசூதனனை ஆதரித்து முன்னாள் அமைச்சர் மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாண்டியராஜன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது பிரசார வாகனத்தில் மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உருவபொம்மை வைக்கப்பட்டிருந்தது. அதன் மீது தேசிய கொடியும் போர்த்தப்பட்டிருந்தது.
இது தொடர்பாக பறக்கும் படை சார்பில் ஆர்.கே.நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து பாண்டியராஜன் மற்றும் ஓ.பி.எஸ் ஆதவாளரான டாக்டர் அழகு தமிழ்செல்வி ஆகியோர் மீது தேசிய கொடியை அவமதித்ததாக 2 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் பாண்டியராஜனுக்கு உயர் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி பாண்டியராஜன் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, மனுதாரர் பாண்டியராஜன் மீதான வழக்கை ரத்து செய்து தீர்ப்பளித்தார்.