பந்தலூர், செப்.6: நீலகிரி மாவட்டம், நெலாக்கோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட பிதர்காடு அரசு ஆரம்பப்பள்ளி பகுதி மற்றும் மாணிக்குன்னு, கைவட்டா உள்ளிட்ட பகுதிகளில் ஏராளமான மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு செல்லும் காங்கிரீட் சாலை கடந்த பல வருடங்களுக்கு முன் போடப்பட்டது. இந்த சாலை தற்போது பழுதடைந்து குண்டும், குழியுமாக இருப்பதால் ஆட்டோ உள்ளிட்ட வாகனங்கள் சென்று வர முடியாமல் உள்ளது. மேலும் ஆரம்பப்பள்ளிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் மக்கள் சாலையில் நடந்து செல்ல முடியாமல் சிரமம் அடைகின்றனர். பழுதடைந்த சாலையை சீரமைக்கக்கோரி அப்பகுதி மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் பொதுமக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே பழுதடைந்து குண்டும், குழியுமாக உள்ள சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.