கந்தர்வகோட்டை, மே24: புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை அருகேயுள்ள பிசானத்தூர் கிராமத்தில் திரௌபதியம்மன் கோயிலில் தீமிதி திருவிழா நடைபெற்றது. தீக் குழி இறங்க சுமார் 400 முதல் 500 பக்தர்கள் கங்கணம் கட்டியிருந்தனர். இவர்கள் கந்தர்வகோட்டை ராஜகணபதி ஆலய ஊரணியிலிருந்து கரகம் எடுத்து சென்று தீக்குழி இறங்கினார். இதில் காட்டு நாவல், துலுக்கன் பட்டி, செட்டி காடு, அக்கச்சிப்பட்டி, புதுப்பட்டி, முதுகுளம், மெய்குடி பட்டி ,தஞ்சை, செங்கிப்பட்டி, மட்டங்கால், சிவந்தான்பட்டி, வீரடிப்பட்டி ஆகிய பகுதியிலிருந்து சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
விழாவை முன்னிட்டு இன்னிசை கச்சேரி, வாண வேடிக்கை நடைபெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது. கந்தர்வகோட்டை காவல்துறை ஆய்வாளர் செந்தில்மாறன், உதவி ஆய்வாளர் கேசவமூர்த்தி ஆகியோர் தலைமையில் ஏராளமான போலீசார் மற்றும் ஊர்காவல்படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு படை வீரர்கள் பணியில் இருந்தனர். கந்தர்வகோட்டை தாசில்தார் காமராஜ் வழிகாட்டுதலின் பேரில் வருவாய்துறை ஆய்வாளர் செல்வ சித்தியா, கிராம நிர்வாக அலுவலர் அன்பரசன் விழாவில் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.